திருச்சி சூர்யா பேசுவதாக "லீக்கான" ஆடியோ.. குறுக்கே அடிபட்ட "அந்த" பெயர்.. ஆஹா கசியவிட்டது அவங்களா?
சென்னை: பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று இணையத்தை உலுக்கி உள்ளது. இந்த ஆடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் வேறு விதமான கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூர்யா, ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இருவரும் பேசியதாக கூறப்படும், அதிகாரபூர்வமற்ற ஆடியோ ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. இந்த ஆடியோவில் பேசுவது இருவரும் தானா என்று உறுதி செய்யப்படவில்லை. இருவரும் இது தங்களின் ஆடியோ என்று மறுக்கவில்லை.
இந்த வீடியோவில் கேட்கும் பெண் குரல் டெய்சியுடைய குரல் என்று கூறப்படுகிறது. எதிரில் கேட்கும் குரல் கொண்ட நபரை டெய்சி சூர்யா சூர்யா என்று அழைத்து சண்டை போட்டுள்ளார்.
டெய்சி சரணை மிரட்டிய ஆடியோ?.. பாஜக நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க தடை.. அண்ணாமலை அதிரடி
என்ன காரணம்
பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட கூடாது. அதில் நியமிக்கப்படும் நிர்வாகிகள் என்னுடைய ஆட்களாக இருக்க வேண்டும் என்று சூர்யா பிரஷர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதான் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என்கிறார்கள்.
போன் கால்
இந்த நிலையில்தான் டெய்சிக்கு அதிகாலை 6. 20 மணிக்கு போன் செய்து சூர்யா கடுமையாக பேசியதாக ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் மிக மோசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகள் ஆடியோவில் நிரம்பி வழிகின்றன. அதோடு.. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. உன்னுடைய உடல் மெரினாவில் கிடக்கும் என்றும் அந்த ஆடியோவில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளது. எதிரில் அந்த பெண் அமைதியாக விளக்கம் கொடுக்க முயன்றும், ஆண் குரல் தொடர்ந்து கடுமையாக பேசிக்கொண்டு இருக்கிறது.
என்ன சொன்னார்?
நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது, என்று கூறி உள்ளார். இந்த ஆடியோவில் இருப்பது சூர்யா என்று உறுதியாகவில்லை. ஆனாலும் : பாஜக நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க வேண்டாம் என தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். சூர்யாவின் ஆடியோ என்று சொல்லப்படும் ஆடியோ வைரலான காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இன்னொரு சர்ச்சையில் எழுந்துள்ளது. டெய்சி பதவி எப்படி பெற்றார் என்று இதில் சூர்யா சில விஷயங்களை குறிப்பிட்டு உள்ளார்.
சூர்யா
அதில் பாஜக நிர்வாகி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு உள்ளார். அந்த நபர் குறித்தும் இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜகவில் பதவி பெறுவது தொடர்பாக அந்த நபர் மீது சில பெண்கள் ரீதியான புகார்கள் வைக்கப்பட்டன. அதே நபரின் பெயரின் மீண்டும் திருச்சி சூர்யா பயன்படுத்தி உள்ளார். இது போக தற்போது பாஜகவில் திருச்சி சூர்யா ஆடியோவை லீக் செய்தது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இது தற்போது பாஜக வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடியோவை மீடியாவுக்கு கொடுத்தது யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
நெருக்கடி
பாஜகவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி ஒருவர் இந்த ஆடியோவை மீடியாக்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கட்சியில் நடக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஆடியோ விவகாரமும், காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரமும் டெல்லி வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி ரீதியாக விசாரணை நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விவரங்கள் காரணமாக ஒரே நாளில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.