எலான் மஸ்க் வியந்து பாராட்டிய தமிழர்.. டெஸ்லாவை ஆளும் தமிழ் டெக்கி! யார் இந்த அசோக் எல்லுச்சாமி?
சென்னை: டெஸ்லா நிறுவனரும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தமிழரான அசோக் எல்லுச்சாமியைப் புகழ்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க் புகழ்ந்த அந்த தமிழர் யார்?
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அமெரிக்காவில் செயல்படும் டெஸ்லா நிறுவனம் உலகளவில் முன்னணியில் உள்ளது. இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர். பே பால், ஸ்பேஸ் எக்ஸ் என எதிர்காலத்தை முன்னிறுத்திய நிறுவனங்களை தொடங்கி, உலக அளவில் கவனம் ஈர்த்தவர் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், தானியங்கி வாகன தயாரிப்பில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

டெஸ்லா ஆட்டோ பைலட்: டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோ பைலட் என்ற தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பக் குழுவை எலான் மஸ்க் கடந்த 2015ஆம் ஆண்டில் அமைத்தார். அந்தக் குழுவில் பொறியாளர்களைப் பணிக்குச் சேர்த்தார். அப்படி டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் தான் தமிழகத்தைச் சேர்ந்த அசோக் எல்லுச்சாமி.
பின்னர், டெஸ்லா ஆட்டோ பைலட் சாஃப்ட்வேர் குழுவின் தலைமைப் பொறுப்புக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் வந்தார் அசோக் எல்லுச்சாமி. சுயமாக தானே சிந்தித்து இயங்கக்கூடிய காருக்கான சாஃப்ட்வேரை இயக்கும் மிகப்பெரிய, வருங்காலத்தை தீர்மானிக்கக் கூடிய பணியை தலைமை தாங்கி வருகிறார் அசோக்.
பாராட்டிய எலான் மஸ்க்: இந்நிலையில் தான் டெஸ்லா நிறுவனத்தில், தானியங்கி கார்களுக்கான சாஃப்ட்வேரை உருவாக்கும் பிரிவில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பங்கு எத்தகையது என்பதைக் குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் அசோக். அந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி டெஸ்லாவின் ஆட்டோ பைலட் பிரிவிற்கு அசோக்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனக் கூறி நன்றி தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

டெஸ்லாவின் ஆட்டோ பைலட் பிரிவில் முதலில் சேர்ந்தவர்களுள் முக்கியமானவர் அசோக். அவர் இல்லையென்றால் டெஸ்லா மற்றுமொரு கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்திருக்கும். இவ்வளவு உயரத்தை அடைந்திருக்காது. நான் 10 நிமிடங்களுக்கு முன்பு அசோக்கை பார்த்த போது கூட அவர் இதனை எழுதியதை அறியவில்லை என தன்னுடைய பதிவில் அசோக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
யார் இந்த அசோக் எல்லுச்சாமி?: அசோக் எல்லுச்சாமி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்கா சென்ற அசோக், பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக் சிஸ்டம் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

தொடக்கத்தில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஆய்வுப் பிரிவில் பணியாற்றிய அசோக், டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவில் மென்பொறியாளராக 2014ஆம் ஆண்டில் இணைந்தார். தற்போது டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில் நுட்பக் குழுவின் இயக்குநராகியிருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்தில் வாகனங்களில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளைக் கச்சிதமாக முடித்துப் பெயர் பெற்றவர் அசோக். மேலும், அசோக் தலைமையில் ஆட்டோ பிரேக்கிங் தொழில்நுட்பத்தில் பல சாதனைகளை படைத்திருக்கிறது டெஸ்லா நிறுவனம். இந்நிலையில் தான் அசோக்கை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.












Click it and Unblock the Notifications