யாருங்க இப்படிலாம்.. தவறாக வழி நடத்துவது! கொத்தாக ராஜினாமா செய்யும் தவெக எம்எல்ஏக்கள்? விஜய் திட்டம்
சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், எந்தக் கட்சியும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, ஆட்சியமைக்கத் தேவையான 'மேஜிக் நம்பர்' ஆன 118-ஐ எந்தவொரு தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணியோ எட்டவில்லை.
ஆளுநரின் கிடுக்கிப்பிடி கேள்வி: திணறும் தவெக
தற்போதைய நிலவரப்படி, 107 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன் மூலம் தவெக அணியின் பலம் 112-ஆக உயர்ந்தது.

இருப்பினும், சபாநாயகர் இல்லாமல் தவெக வசம் 111 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான மீதமுள்ள 7 இடங்களை எவ்வாறு திரட்டப் போகிறீர்கள் என்ற ஆளுநரின் கேள்விக்கு தவெக தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. "சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறி, ஆளுநர் மாளிகை விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. இதனால் தவெக முகாமில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக - அதிமுக: கைகோர்க்கும் பரம எதிரிகள்?
தமிழக அரசியல் வரலாற்றிலேயே கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு திருப்பமாக, திராவிட அரசியலின் இரு துருவங்களான திமுக (59 இடங்கள்) மற்றும் அதிமுக (47 இடங்கள்) ஆகியவை தவெக-வை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க ரகசியமாக வியூகம் அமைப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
ஒருவேளை திமுக, அதிமுக-விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தால், அந்த அணியின் பலம் 106-ஆக உயரும். இவர்களுடன் விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) இணைந்தாலும் மொத்த பலம் 115-ஐ மட்டுமே தொடுகிறது. 118 என்ற இலக்கை எட்ட இன்னும் 3 இடங்கள் தேவைப்படுகின்றன. இதில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும் சூழல் உள்ளதாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்பதாலும் இங்கும் இழுபறி நீடிக்கிறது.
தவெக-வின் அதிரடி வியூகம்: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?
ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகக் கூறி தவெக தொண்டர்கள் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தவெக உயர்மட்டக் குழுவிலிருந்து கசிந்துள்ள ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றால், தனது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, ஒட்டுமொத்தமாகத் தேர்தலைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
"எதிராளிகள் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்றால், மக்கள் மன்றத்திற்கே மீண்டும் செல்வோம்" என்பதே தவெக-வின் நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும், தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், அவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து, பெரும்பான்மைக்கான இலக்கும் (Halfway mark) தானாகவே குறைந்துவிடும். அதாவது 234 - 108 = 126 இடங்களாக குறையும். அப்படி குறைந்தால் மெஜாரிட்டிக்கு 64 இருந்தால் போதும். எதிர் தரப்பினருக்கு ஆட்சியமைப்பதை இன்னும் எளிதாக்கிவிடும். மேலும், அந்த 108 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகும். மீண்டும் அதில் அனைத்திலும் வென்றால் கூட விஜய் ஆட்சி அமைக்க முடியாது.
ஆனால் இந்த ஐடியாவை யாரோ விஜய்க்கு கொடுத்து அவரை தவறாக வழி நடத்தி உள்ளார்கள். இதனால் விஜய் ராஜினாமா செய்யும் திட்டத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
முடிவு யாருடைய கையில்?
தற்போது நிலவும் குழப்பமான சூழலால் ஆளுநர் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் மௌனம் காத்து வருகிறார். தவெக தனது எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவை எடுப்பது தற்கொலைக்குச் சமமானது என அரசியல் விமர்சகர்கள் கருதினாலும், ஒரு தார்மீகப் போராட்டமாக இதை முன்னெடுக்க விஜய் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் ஆட்சி அமையுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு விடை இன்னும் ஆளுநர் மாளிகையிலேயே முடங்கிக் கிடக்கிறது. அடுத்த சில தினங்களில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications