அமமுகவில் அண்ணா, திராவிடம் இல்லைனு வெளியேறினாரே! தவெகவில் இருக்கா என்ன? யார் இந்த நாஞ்சில் சம்பத்?
சென்னை: நடிகர் விஜய்யை ஆதரித்து பேசி வந்த திராவிட பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ள நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம்.
"விஜய்க்கு அரசியல் ஆழம் தெரியாது. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்" என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

அவர் விஜய்யின் கொள்கை தலைவர்களுடன் சேர்த்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்களையும் பயன்படுத்தி வருகிறார். இவர் அதிமுகவில் இருந்து நிறைய பேரை அழைத்து வருவார் என சொல்லப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தவெகவில் இணைவார்கள் என சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அது குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை. இந்த நிலையில் திமுக ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், அண்மைக்காலமாக தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வந்தார்.
"இவர் ஏன் ஆதரவு தெரிவிக்கிறார், நம் தலைவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுக ஆதரவாளர், நம் கட்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறார் என தவெகவினர் தங்களுக்குள் கேள்விகளை எழுப்பிக் கொண்டனர்.
இந்த நிலையில்தான் இன்று தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் யார் என்பதை பார்க்கலாம்.
திமுகவில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், வைகோ வாரிசு அரசியலை கண்டித்து வெளியேறிய போது நாஞ்சில் சம்பத்தும் வெளியேறினார். வைகோ புதிதாக மதிமுக என்ற கட்சியை தொடங்கிய போது நாஞ்சல் சம்பத்திற்கு மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.
சிறந்த பேச்சாளரான இவர் , வைகோவுக்கு இணையாக பேச்சாற்றல் பெற்றவராக இருந்தார். ஆனால் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கியதுடன், தமிழகம் முழுவதும் அவர் வலம் வர ஒரு காரையும் கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாஞ்சில் சம்பத்தின் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதன் பின்னர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், தினகரனின் கட்சி பெயரான அமமுகவில் திராவிடம், அண்ணா ஆகிய பெயர்கள் இல்லை. அவை இல்லாத இடத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை என கூறி அங்கிருந்தும் வெளியேறினார். பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். மேலும் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அண்மையில் புதிய கட்சி தொடங்கிய போது அந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை ஊரை சேர்ந்தவர். இவர் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் படித்தார். இவருக்கு மனைவி சசிகலா, குழந்தைகள் மதிவதனி, சரத் பாஸ்கரன் ஆகிய இருவர் உள்ளனர்.
கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் 'நாதியற்றவனா தமிழன்?' என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.












Click it and Unblock the Notifications