“மாஸ்டர் மைண்ட்” - யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்? அன்று ஓபிஎஸ்.. இன்று சசிகலா! தொடரும் சந்திப்பு
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரம் எடுத்த சூழலில் அன்று ஓ.பன்னீர்செல்வம் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை கோரிய நிலையில் தற்போது சசிகலாவும் அவரை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.
பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இன்று பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு.. நாளை யாரை சந்திப்பார்?.. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.
மோதல் தொடர்கதை
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.
ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்த பொதுக்குழு கூட்டங்களுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை பெற்றார். அதன் தொடர்ச்சியாகவே அவர் பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.
சசிகலா
இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா, தினகரன் தரப்பு ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் இன்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசித்தார் சசிகலா. "என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விசயமாக கலந்து பேசினேன். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை." என சசிகலா பேசியுள்ளார்.
யார் இந்த பண்ருட்டியார்?
கடந்த 1934 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்த ராமச்சந்திரன், 5 முறை எம்.எல்.ஏவாகவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் 4 முறை அமைச்சராகவும் இருந்தவர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் பயணித்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது உடன் இருந்த முக்கிய தலைவர்களில் இருவரும் ஒருவராக இருக்கிறார்.
நிலைபாடு
2014 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கட்சியின் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதால் இவர் அளிக்கும் தகவல்களை வைத்து காய் நகர்த்தலாம் என்பதே ஓ.பி.எஸ். சசிகலா ஆகியோரின் நோக்கமாக இருக்கும். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் யாரையும் இவர் சந்திக்காத சூழலில் இவரும் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.