தொட்ட இடமெல்லாம் வெற்றிதான்.. ஜெகன் மோகனை அரியணை ஏற்றிய கையோடு ஸ்டாலினுடன் இணைந்த பிரசாந்த் கிஷோர்
Recommended Video
சென்னை: பல்வேறு தேர்தல்களில் தான் சார்ந்த கட்சிக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்த, பிரசாந்த் கிஷோர் டீம், தற்போது திமுகவுக்காக உழைக்க களமிறங்கியுள்ளது.
கடைசியாக, இந்த டீம் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பணியாற்றியபோது, அவர் முதல்வராக பதவிக்கு வந்தார். அடுத்த ஆண்டிலேயே திமுகவுடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளது, அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் கொள்கைகளை மூலதனமாக கொண்ட ஒரு கட்சிக்கு, கார்ப்பரேட் உதவி தேவையா என்ற வாதம் ஒரு பக்கம் சமூகவலைத்தளங்களில் வைக்கப்படுகிறது. மற்றொரு பக்கம், அரசியல் எதிரிகள் பலம் மிக்கவர்களாக மாறி வருவதால், அதை சமாளிக்க சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது.

மோடி டீம்
பிரசாந்த் கிஷோரின் அரசியல் பயணத்தை பார்த்தால், 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோதே, இவரது பெயர் பிரபலமாக அடிபடத் தொடங்கியது. இந்திரா காந்திக்கு பிறகு இப்படி ஒரு அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது நரேந்திர மோடிதான். அந்த வெற்றியில் பாஜக வெற்றிக்கு உழைத்த பிரசாந்த் கிஷோர் அணியின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாக கூறப்பட்டது.

வியூகம்
2015 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கிஷோர் உதவியை நாடியது. அந்த அணிக்காக பணியாற்றிய போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை சேர்த்துக்கொண்டார் கிஷோர். இதற்கு நடுவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காகவும் வியூகம் வகுத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோர் டீம்.

ஜெகன் மோகன் ரெட்டி
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசத்தை வீழ்த்திவிட்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போது பிரசாந்த் கிஷோர்தான் ஜெகன்மோகன் ரெட்டிக்கான அரசியல் அணியில் இடம் பெற்று இருந்தார். இது அவரது சமீபத்திய வெற்றி. அதேநேரம் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்ததால் கோபித்துக்கொண்டு அந்த கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேறியுள்ளார்.

வெற்றிக்கு பங்களிப்பு
இந்த நிலையில்தான் திமுக அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். 2014ல் மோடி தலைமையில் பாஜக ஆட்சியை கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய பிரசாந்த் கிஷோர், அதன் பிறகு பெரும்பாலும் பாஜகவின் எதிர்க்கட்சிகளுக்காகத்தான் தேர்தல் களப் பணியாற்றி வருகிறார், என்பது இதில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். எனவே கொள்கை ரீதியாகவும், திமுகவுக்கும் அவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப் போகும் என்பதால் இணைந்து செயலாற்றுவது பெரிய சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுத்து வரக்கூடிய ஸ்டாலினுக்கு, பிரசாந்த் கிஷோர் பக்கபலமாக இருப்பார் என்பதை உடன்பிறப்புகளின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications