செங்கோட்டையன் யார்? அமித் ஷா சட்டென கேட்ட கேள்வி.. எடப்பாடி சொன்ன விஷயம்.. நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அமித் ஷா உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் குறித்து புகார்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீங்கள் தலையிட மாட்டீர்கள் என்று உறுதி அளித்தீர்கள். அதை அடிப்படையாக வைத்தே கூட்டணி வைத்தோம். அப்படி இருக்க செங்கோட்டையனை சந்தித்தது ஏன்? எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவது சரியா? என்று எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பில் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அமித் ஷா.. நான் உங்கள் கட்சி விவகாரத்தில் எதுவும் தலையிடவில்லை. செங்கோட்டையன் யார்.. கட்சி விவகாரத்தில் அவர் மூலமாக நான் தலையிட என்ன இருக்கிறது. நாம் கூட்டணியில் இருக்கிறோம். அதில் பிரச்சனை இல்லை. அப்படி இருக்க நான் என்ன செய்ய போகிறேன் என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.
அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம்
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தன்னைச் சந்தித்தது ஒரு சாதாரண வாழ்த்துப் பரிமாற்றம் மட்டுமே என்றும், எந்தவித அரசியல் விவாதமும் நடைபெறவில்லை என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாஜக தலைவர்கள் சிலர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை குறித்து வெளியிட்ட கருத்துகள், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அவரது இந்த விளக்கத்தை அமித் ஷா ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட சந்திப்புக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி மற்ற அதிமுக தலைவர்களுடன் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.
எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு என்ன நடந்தது?
நேற்று தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை முன்கூட்டியே தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியாக அமித்ஷா உடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் நடந்த சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று அமித்ஷாவை சந்திக்க டெல்லி போலீசாரின் 2 பாதுகாப்பு வாகனத்துடன் எடப்பாடி பழனிசாமி உள்ளே சென்றார்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு பயணம்
முதலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் 10 நிமிடங்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், நிர்வாகிகள் மட்டும் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்த டெல்லி போலீசார் வாகனமும் அவர்களுடன் விடுதிக்குச் சென்றது.
பிறகு, ஹிந்தி மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் கொண்டு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். ஆலோசனை முடிந்து போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே வெளியேறி விடுதிக்குச் சென்றார்.












Click it and Unblock the Notifications