இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவராக தளி ராமச்சந்திரன்.. தனி செல்வாக்கு.. யார் இவர்?
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தளி தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்றவர் ராமச்சந்திரன். தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற்றது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) 2 இடங்களில் வெற்றி பெற்றது.

சட்டமன்றக் குழு தலைவர்
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களில் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து என 2 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தளி ராமச்சந்திரன்?
கிருட்டிணகிரி மாவட்டம் வரகானப்பள்ளி என்னும் மலைக் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமச்சந்திரன். இவர் 1996 முதல் 2001 வரை நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார், பின்னர் 2001 முதல் 2006 ஆண்டுவரை கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவராக இருந்தார்.
தளி ராமச்சந்திரன் 2006 ஆம் ஆண்டு சிபிஐஎம் கட்சியில் இணைந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதிக்குப் போட்டியிட விருப்ப மனுவும் கொடுத்த நிலையில், தளி தொகுதியை திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் சிபிஎம் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த தளி ராமச்சந்திரன் ஏமாற்றமடைந்தார்.
சுயேட்சையாக வெற்றி
தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளராக களமிறங்கிய நாகராஜரெட்டிக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்கிய ராமச்சந்திரன், நாகராஜரெட்டியை தோற்கடித்தார். சுயேட்சையாக வெற்றி பெறும் அளவுக்கு தொகுதிக்குள் செல்வாக்கு மிகுந்தவர். அவர் எந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து வென்றாரோ அதே கட்சி அவரை அரவணைத்துக் கொண்டது. சுயேட்சையாக வென்ற ராமச்சந்திரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
2011-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர், தன் கிரானைட் சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிரானைட் குவார்கள் இவருக்கு சொந்தமாக உள்ளன. கிரானைட் முறைகேடுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் பழனி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
4வது முறையாக எம்.எல்.ஏ
2016 சட்டசபை தேர்தலில் மீண்டும் சிபிஐ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ராமச்சந்திரன். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் இருந்து சிபிஐ சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார். அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே தொகுதியில் 5வது முறையாகப் போட்டியிட்டு 4வது முறையாக வெற்றி பெற்றார் தளி ராமச்சந்திரன். இந்நிலையில், சிபிஐ சட்டமன்றக் குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications