உங்களோடு பாஜகவில் இருந்து பேசிக்கொண்டிருப்பது யார்? செய்தியாளர்களை அதிர வைத்த ஓபிஎஸ் பதில்
சென்னை: உங்களோடு பாஜகவில் இருந்து பேசிக்கொண்டிருப்பது யார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்ன பதில் கூறினார் என்பதை பாருங்கள்.
பாஜக உடன் 2024ல் மட்டுமல்ல, 2026 தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு ஒ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட ஓபிஎஸ் அணியினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது பாஜகவினர் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்து பேசுகையில், கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தினம் தோறும் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்றார். அப்போது செய்தியாளர்கள் அது யாருன்னு சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளிக்கையில், எங்களுடன் மத்திய தலைமையில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் டெல்லிக்கு சென்று ஜேபி நட்டாவையோ அல்லது அமித்ஷாவையோ சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், கூட்டணி என்பது உங்கள் தலைமையில் அமையுமா என்று கேட்டனர், அதற்கு ஓபிஎஸ் இது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். இதில் தேசிய அளவில் கட்சி நடத்துபவர்களே இந்தியாவை ஆள முடியும். பாஜக இரண்டு முறை ஆண்டிருக்கிறது. மூன்றாவது முறையும் ஆள்வதற்கான தகுதியையும் பெற்றிருக்கிறது. ஆகவே அவர்கள் தங்களது முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம் என ஓபிஎஸ் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜக அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று திமுகவினர் சொல்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இது நாடகமில்லை.. பாஜக 16 மாநிலங்களை ஆண்டு கொண்டிருக்கிற ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய தேசிய கட்சி.. என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பாரத பிரதமர் மோடியின் பக்கத்தில் (எடப்பாடி பழனிசாமியை) உட்கார வைத்துக் கொண்டு அதிமுக உடன் கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி அறிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையை தொடர் நம்பிக்கை துரோகமாக செய்து கொண்டிருப்பது யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ந்து நம்பிக்கை துரோக அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அங்கு மீட்டிங்கில் பேசிவிட்டு வந்து, இங்கு தமிழ்நாட்டிற்கு நாங்கள் தான் தலைமை.. என எடப்பாடி சொல்லப்போய் தான் ஆரம்பித்தது இந்த பிரச்சனை என்றார்.
அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர் டெல்லி பாஜக தலைமையிடம் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் கூறியதாக சொல்லப்பட்டது, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்து பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்? அண்ணா திமுகவில் ஏற்பார்களா.. அப்புறம் எப்படி பாஜகவில் ஏற்பார்கள்.. தேசிய கட்சியில் உள்ளவர்களை மாநில கட்சியில் உள்ளவர்கள் மாற்றுங்கள் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது" என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications