"காவியின் காவலன்".. ஆர்எஸ்எஸ் டூ கவர்னர்.. விஜய்யை திணறடிக்கும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் யார்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை இல்லை. விஜய் பெரும்பான்மையை காட்டினால் தான் முதல்வராக பதவியேற்க அழைப்பேன் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியுள்ளார். இந்நிலையில் தான் இந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேகர் யார்? ஆர்எஸ்எஸ், பாஜகவில் செயல்பட்ட அவர் 'காவியின் காவலன்' என்று அழைக்கப்பட்டதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பலம் 113 ஆக உள்ளது. ஆனால் மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார்.

இதற்காக 2 கம்யூனிஸ்ட், விசிகவிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 பேரிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இதற்கிடையே தான் விஜய் தனது தவெக எம்எல்ஏக்கள் - காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார். அதன்பிறகு இன்றும் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து பேசினார். ஆனால் ஆளுநரோ, பெரும்பான்மைக்கு 5 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ளது. பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் இப்படி?
பொதுவாக ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை இருந்தால் உடனடியாக குறிப்பிட்ட தலைவர் முதல்வராகிவிட முடியும். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட முதல்வராகலாம். அதாவது பெரும்பான்மைக்கு சில எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் எனும்போது அவர்கள் தனிப்பெரும் கட்சி என்பதை காட்டி ஒருவரால் முதல்வராக முடியும். அந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்கள் முதல்வர்களாக பொறுப்பு ஏற்றுள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் சட்டசபையில் குறிப்பிட்ட நாட்களில் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதில் பெரும்பான்மையை காட்டினால் முதல்வராக தொடரலாம். இல்லாவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் தற்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்யை முதல்வராக பதவியேற்க விடாமல் தன்னிடம் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று பணித்திருக்கிறார்.
யார் இந்த ஆளுநர்?
இது தவெகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேகரின் செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் 1954ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜியில் பிறந்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அவருடைய பெற்றோர் விஸ்வநாத் அர்லேகர் மற்றும் திலோத்தம்மா அர்லேகர். மனைவி பெயர் அனஹா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாஸ்கோடகாமாவில் அமைந்த செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு எம்எஸ். கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார்.
ஆர்எஸ்எஸ் வாழ்நாள் உறுப்பினர்
பள்ளி காலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பங்கேற்று செயல்பட்டு வந்தார். தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். 'எமர்ஜென்சி' காலத்தில் 2 ஆண்டு வரை தனது தந்தையுடன் சிறை சென்றார்.
இவர் செல்லமாக 'காவியின் காவலன்' (Saffron Guard) என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களாக அழைக்கப்பட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்ட விதம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கை பிடிப்பில் உறுதியாக இருப்பவர் என்பதால் அந்த பெயரை அவர் பெற்றார்.
பாஜக எம்எல்ஏ - சபாநாயகர் - அமைச்சர்
இவர் 1989ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2002 முதல் 2007 வரை கோவாவில் எம்எல்ஏவாக இருந்தார். 2003 முதல் 2007 வரை கோவா யூனியன் பிரதேச பாஜக தலைவராக இருந்தார். பிறகு மீண்டும் 2012 முதல் 2017 வரை எம்எல்ஏவாக இருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் 2012 முதல் 2015 வரை கோவா சட்டசபையின் சபாநாயகராக பதவி வகித்தார். அப்போது இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா சட்டசபையாக கோவா சட்டசபையை மாற்றினார். பிறகு சபாநாயகர் பதவிக்கு பதில் அமைச்சரானார். 2015 முதல் 2017 வரை கோவாவில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.
ஆளுநரானது எப்படி?
ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவில் செயல்பட்ட விதம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவர்ந்தது. இதற்கு பரிசாக ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி 2021ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு 2023 பிப்ரவரி 16ல் பீகார் ஆளுநராக பணியாற்றினார். பிறகு 2024 டிசம்பர் மாதம் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் ஆளுநர் ஆர்என் ரவி இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மார்ச் 5ம் தேதி நியமிக்கப்பட்டார். மார்ச் 12 முதல் தமிழக பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கேரளாவில் ஆளுநராக நியமிக்கப்பட்ட உடன் அங்கு இருந்த எல்ஃடிஎப் எனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான முதல்வர் பினராயி விஜயன் அரசுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு முட்டுக்கட்டை போட்டு 'லைம்லைட்'டுக்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications