அதிமுக இப்போ யார்கிட்ட இருக்கு? எதிரெதிராக வாதங்கள் - கட்சி விதி என்ன சொல்லுது? குழம்பும் ர.ரக்கள்!
சென்னை : எடப்பாடி தரப்பு சொல்லும் சட்ட விதியின்படி பார்த்தால் கூட, செப்டம்பர் மாதம் வரை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு அதற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. எடப்பாடி தரப்பு தங்கள் வாதத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை எடுத்து வைக்கிறது. அதிமுக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
பெரிய 'பன்னீர்’ ரோஜா மாலை! பெஞ்சமினை பஞ்சராக்கிய எடப்பாடி! ’அண்ணன்’ கோச்சுப்பாரு.. அடடே ஆச்சரியகுறி!
சிவி சண்முகம்
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகு நடந்த இந்தப் பொதுக்குழு பாதியிலேயே கலைந்தது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், அதிமுகவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் கூறுகின்றனர். ஆனால், எடப்பாடி தரப்போ வேறொரு வாதத்தை வைக்கிறது.
ஒப்புதல் பெறவில்லை
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் நேற்று பேசிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டதாகத் தெரிவித்தார். 2021 டிசம்பர் 2ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் அவர்களது பதவிகள் காலாவதியாகிவிட்டன எனத் தெரிவித்தார்.
பதவிகள் காலாவதி
அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் தற்போது இல்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதி ஆகிவிட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க பொருளாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். வைத்திலிங்கம் மாவட்ட செயலாளராக மட்டுமே உள்ளார் என்றும் சி.வி.சண்முகம் தடாலடியாகப் பேசினார்.
எடப்பாடி தரப்பு
ஆனால், 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய பதவிக் காலம் செப்டம்பர் வரை உள்ளது. எனவே, அதுவரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் தவறான வாதங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் திருத்தம் செய்து, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் 2021 டிசம்பர் 2ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்கள் முன்பு இருந்த பதவி காலாவதி ஆகிவிட்டது. அதன்பிறகு தேர்தலில் போட்டியின்றி வென்றதாக பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் வரை அவர்கள் காபந்து பொறுப்பில் தான் இருப்பார்கள், அதுவும் இந்த பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்படாததால் இனி அந்த பதவிகள் செல்லாது என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
தலைமைப் பதவியில் யார்?
ஓபிஎஸ் தரப்பும், ஈபிஎஸ் தரப்பும் நேர் எதிரான வாதங்களை வைத்து வருவதால் இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? இல்லை என்றால் அதிமுகவின் தலைமைப் பதவியில் தற்போது இருப்பது யார்? என அக்கட்சித் தொண்டர்களே குழம்பி வருகின்றனர். அவைத்தலைவர் பதவி தான் தற்போது அதிமுகவில் தலைமைப் பதவி என ஈபிஎஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், ஓபிஎஸ் தரப்போ, தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதே பொதுக்குழுவில் நிறைவேற்றப்படாமல் செல்லாது எனக் கூறுகின்றனர்.
சுற்றிச் சுற்றிக் குழப்பம்
கட்சிக்குள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இருதரப்பு ஆதரவாளர்களும் அடித்துக் கொள்ளும் சூழலில், உட்கட்சி விதிகள் தொடர்பாகவும் தெளிவில்லாத நிலை இருக்கிறது. இரண்டு தரப்பினருமே, தங்களுக்கு சாதகமான விதிகளை முன்வைத்து பேசி வருகின்றனர். இந்தப் பிரச்சனை தேர்தல் ஆணையம் சென்றால்தான் தீரும், அப்போதுதான் தொண்டர்களின் குழப்பம் நீங்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.