துண்டு துண்டாக "நாக்கை" வெட்டுவோம்.. சீறிய மஹா சுசீந்திரன்.. மதுரை மாவட்ட பாஜக தலைவர் கைதாகிறாரா?
நாக்கை வெட்டுவதாக பேசிய மகா சுசீந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சென்னை: இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்று பேசி பரபரப்பை கிளப்பிய மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தமிழகத்தில் 10 இடங்களிலாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கி உள்ளது.
இதற்காக தமிழக அரசை விமர்சித்தும், தினந்தோறும் குற்றஞ்சாட்டியும், புகார் கூறியும், திமுக மீதான டேமேஜ்ஜை உருவாக்க முயற்சித்து கொண்டிருக்கிறது.

ஸ்பெஷல் யாகம்
இதையொட்டி, பாஜக + திமுக இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல்களும் வலுத்து வருகின்றன.. அதேசமயம், திமுகவுக்கு செக் வைப்பது, சவால்விடுவது போன்ற செயல்களிலும் பாஜக தரப்பு ஈடுபட்டு வருகிறது.. இந்நிலையில், மதுரை சிலைமான் பகுதியில் உள்ள கல்லம்பல் வில்வநாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பில் கடந்த 7-ந் தேதி சிறப்பு பூஜை நடந்தது... இந்த யாகத்தில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரிய கர்த்தர்கள்
பிறகு செய்தியாளர்களை சுசீந்திரன் சந்தித்து பேசியபோது, ராஜராஜ சோழன் இந்து இல்லை என்பது தொடர்பான சர்ச்சைகளுக்கு, பாஜகவினர் திருமாவளவன், வெற்றிமாறன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருவது குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது.. இதற்கு சுசீந்திரன் அளித்த ஆவேசமான பதில்கள் இதுதான்: "நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளுகின்ற புனிதமான இயக்கத்தை சார்ந்த காரிய கர்த்தர்கள் என்கிற அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம். அந்தப் பொறுப்பை என்று துறந்து நான் இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்கள் உடலில் இருக்காது வெட்டி விடுவோம்.

நாக்குகள்
இதற்காக பல வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று நான் எச்சரிக்கிறேன். அரசியல் நாடகமாடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியிருந்தார்.

நாக்கு + சலசலப்பு
இந்த பரபரப்பு பேச்சினால் அதிர்ந்து போன எதிர்க்கட்சி தலைவர்கள், சுசீந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்... இந்த நிலையில் நாக்கு வெட்டப்படும் என பேசிய விவகாரத்தில் பாஜக செயலாளர் மகா. சுசீந்திரன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மதுரை பாஜக மாவட்ட தலைவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இது தமிழக பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications