"ஆரம்பிச்சாச்சு".. மாறி மாறி பறக்குது "துண்டு".. அண்ணாமலையின் ஸ்பீடு.. எடப்பாடி பழனிசாமியின் ஓவர்டேக்
சென்னை: தமிழக அரசியலில், எம்பி தேர்தல் வேகம் சூடுபிடிக்க துவங்கிவிட்ட நிலையில், அதிருப்தியாளர்களுக்கு வலைவீசும் படலமும் துவங்கியிருப்பதாக தெரிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் விறுவிறுப்படைந்து வரும்நிலையில், பாஜகவை பலப்படுத்தும் பணியும்நடந்து வருவதாக தெரிகிறது.

இது தொடர்பாக நேற்றுகூட சில தகவல்கள் கசிந்தன. அதாவது, அதிமுகவுள்ளிருக்கும் ஆதரவாளர்களை, தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் உள்ள சில சீனியர்களுக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம்..
எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் + பாஜகவிடம் நெருக்கமாக உள்ளவர்கள் + ஒற்றை தலைமையை விரும்பாதவர்கள் இப்படி பல நிர்வாகிகள் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, "மடியில் கனம்"உள்ளவர்களும் அதிமுகவில் உள்ளதால், பாஜகவின் குறி எந்நேரமும் தங்கள் மீது விழும் என்று அவர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்குதான், தமிழக பாஜக முதலில் தன்னுடைய தூண்டிலை வீசியிருப்பதாக சொல்கிறார்கள்.
சிக்குவார்களா?: பாஜகவில் இப்படியென்றால், அதிமுகவோ அதற்கு மேல் ஸ்பீடாக உள்ளது.. பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க அதிமுகவில் தூண்டில் போடப்பட்டுள்ளதாம்.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் தமிழக பாஜக தலைமையுடன் முரண்பட்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியமாகி உள்ளவர்தான், இப்படி ஒரு ஆட்டத்தை துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. தமிழக பாஜகவில் இருந்தபோது, வலிமையான பொறுப்பில் அவர் இருந்தவர் என்பதால், இப்போதுவரை கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளுடன் அவர் தொடர்பில்தான் இருந்து வருகிறாராம். அதனால், அதிமுக பக்கம் அவர்களை கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
கொடிகம்பம்: கூட்டணி முறிவு என்று அதிமுக அறிவித்ததிலிருந்தே, பாஜகவில் சில சீனியர்கள் அப்செட்டாகி விட்டார்களாம்.. மீண்டும் அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்தால்தான், வரப்போகும் தேர்தலில் இவர்கள் போட்டியிடவே முன்வருவார்கள், இல்லாவிட்டால் வெற்றிபெறுவது கடினம் என்று நினைத்து போட்டியிடாமலேயே ஒதுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.
எனவே, சில விஷயங்களில் மாநில தலைமையுடன் உடன்படாமலும், அதிமுக குறித்து வெளிப்படையாக பேசமுடியாமலும், இருதலைக்கொள்ளியாய் மூத்த தலைவர்களில் சிலர் தவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, யாருடன் கூட்டணி என்பது தெரியாமல், நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் குழம்பி போயிருப்பதால், கட்சிக்குள்ளேயே ஒருவித சோர்வு நிழலாடுகிறதாம்..
இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. 4 நாட்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பம் நடுவது குறித்து, அண்ணாமலை அறிவித்திருந்தபோது, சில மாவட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டப்படவில்லையாம். இதனால்தான், மாநில அளவில் மிகப்பெரிய அளவுக்கு பேசப்பட்டிருக்க வேண்டிய கொடிகம்பம் விவகாரம், அப்படியே அமுங்கிப்போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
கட்சி தாவல்: இப்படியெல்லாம் நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து கொண்டிருக்குபோது, பாஜகவிலிருந்து, அதிமுகவுக்கு யார் தாவினாலும், அது அண்ணாமலைக்கு பெருத்த சிக்கலை தந்துவிடும்.. அதேபோல, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு யார் தாவினாலும், அது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்..பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications