தலைவரை மாத்திடுங்க! இவர்தான் சரியான ஆள்.. மீட்டிங்கில் உச்சரிக்கப்பட்ட பெயர்.. அப்போ கிளைமேக்ஸா!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்? புதிய தலைவராக பொறுப்பேற்க போகும் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமான நிர்வாகி ஒருவர் தலைவர் பதவிக்கான ரேஸில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன,
பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். இப்போது என்று இல்லை.. கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலிலும் கூட மோதல் வெடித்தது . அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக தெரிந்தது.
ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு நிலைமை கைமீறி போய் உள்ளது. கடந்த 15ம் தேதி காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆட்களுக்கும், கே.எஸ் அழகிரி ஆட்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
பாஜக சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது.. அம்பலப்படுத்தியதால் சஸ்பெண்ட்.. காயத்ரிக்கு ஆதரவாக ஜோதிமணி!
என்ன நடந்தது?
பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ஆக போகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ஆயுட்காலம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கே.எஸ் அழகிரி தலைவர் பதவியில் நீடிப்பதற்கான திட்டங்களை போட்டு வருகிறார். இதை பற்றி கேள்வி கேட்க போய்தான் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. கே.எஸ் அழகிரியை மறித்து ரூபி மனோகரன் ஆட்கள் சில கேள்விகளை கேட்க முயன்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சண்டை மோதல்
மாறி மாறி தாக்கிக்கொண்டு, தலையில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு மோதல் உச்சம் பெற்றது. இதையடுத்து டெல்லியில் கே.எஸ் அழகிரிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. செல்வப்பெருந்தகை தலைமை தங்கபாலு, இளங்கோவன் மற்றும் அவரின் ஆட்கள் என்று பெரும் படையே டெல்லிக்கு சென்றது. இவர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினர். அழகிரியை நீக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் இன்னும் தேசிய தலைமை முடிவு எடுக்கவில்லை என்றாலும் விரைவில் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.
மாற்றம்
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைமையக மோதல் தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விசாரணையில் ரூபி மனோகரன் ஆஜராகவில்லை என்று கூறி அவர் நீக்கம் செய்யப்பட்டார். கே. எஸ் அழகிரி உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த சஸ்பெண்டை செய்தது. ஆனால் இதை டெல்லி காங்கிரஸ் தலைமை தவறு என்று கூறி, சஸ்பெண்டை நீக்கி உள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது. அதனால் இதை நிறுத்தி வைக்கிறோம் என்று தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கே. எஸ் அழகிரிக்கு எதிராக காங்கிரஸ் தேசிய தலைமை திரும்பி விட்டதை இது காட்டுவதாக கூறப்படுகிறது.
போட்டி
இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு கட்சிக்குள் கடும் போட்டியும் நிலவி வருகிறது. போட்டியில் இருக்கும் தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம். எம்பி மாணிக் தாக்கூரும் ராகுலின் குட் புக்கில் உள்ளவர்தான். அதேபோல் கார்கேவிற்கும் இவர் நெருக்கம். இவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் வேறு சில கட்சி ரீதியான பிரச்சனைகள், தனிப்பட்ட காரணங்களால் இவருக்கான வாய்ப்பு இப்போது வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. கிரிஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்ல குமார். ராகுல் காந்தியின் குட் புக்கில் இருக்கும் எம்பிக்களில் இவரும் ஒருவர். ராகுல் காந்திக்கு கொஞ்சம் நெருக்கமாக பார்க்கப்படும் தலைவர் ஆவார். இவரும் தொடக்கத்தில் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவருக்கான ரேஸில் இருந்தார். ஆனால் சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புகள் காரணமாக தலைவர் பதவி கேள்விக்குறியாக உள்ளது. இன்னொரு பக்கம் ரூபி மனோகரனும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாக தலைவர் பதவிக்கு விருப்பம் என்று தெரிவித்து உள்ளார். தலைவர் பதவியில் போட்டியிட விருப்பம் உள்ளது என்று கூறி உள்ளார். எம்பி கார்த்தி சிதம்பரம் முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதவி வழங்க வாய்ப்பு குறைவு. அவருக்கு எதிராக கட்சியில் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் டெல்லிக்கு இவர் மீது சாப்ட் கார்னர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரேஸில் லீடிங்கில் இருப்பது இரண்டு பேர் என்று கூறப்படுகிறது. ஒருவர் செல்வப்பெருந்தகை இன்னொருவர் ஜோதிமணி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை. மூத்த உறுப்பினரான இவர் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். சட்டசபை தேர்தல் சமயத்திலேயே இவர் தலைவர் ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அதன்பின் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார்.
இரண்டு பேர்
இது கிட்டத்தட்ட மாநில கட்சித் தலைவர் பதவிக்கு இணையானது. மாநில கட்சித் தலைவருக்கு இருக்கும் பல்வேறு அதிகாரங்கள் இவருக்கு உள்ளது. இதனால் இவருக்கு கூடுதலாக இன்னொரு பவர் புல் பொறுப்பு கொடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது.ஆனாலும் திமுகவின் சப்போர்ட், டெல்லி இவரை நம்பும் காரணங்களால் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, செல்வப்பெருந்தகை தலைவராக்கப்படலாம் என்கிறார்கள்.
ஜோதிமணி
அதேபோல் ஜோதிமணியும் தலைவர் ரேஸில் இருக்கிறார். தலைவர் பதவிக்கான ரேஸில் இவர்தான் இப்போது கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை தொடர்ந்து இவர் காட்டி வருகிறார். எம்பி ஆகுவதற்கு முன்பே இவர் தமிழ்நாட்டில் கவனிக்கப்பட்டவர். ராகுல் காந்தியின் குட் புக்கிலும் இருக்கிறார்.பெண்கள் மத்தியில் இவருக்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மீட்டிங்கில் இவரை தலைவராக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தமிழ்நாடு நிர்வாகி ஒருவரே கூறியதாக தெரிகிறது. ஆனால் இவரை தலைவராக்க கார்த்தி சிதம்பரம் தரப்பு விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.