நெல்லை யாருக்கு காங்கிரஸுக்கா, திமுகவுக்கா.. முட்டி மோதும் பெருந்தலைகள்!
சென்னை: நெல்லை தொகுதி காங்கிரஸுக்கா அல்லது திமுகவுக்கா என்ற பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாம். காரணம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸும், திமுகவில் வைகுண்டராஜன் மகனும் சீட் கேட்கிறார்களாம்.
இதனால் நெல்லைத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவதில் என்பதில் ஸ்டாலின் குழம்பி போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்து விட்டது. இப்போது யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை தேர்வு செய்வதில் கட்சிகளிடையே கடும் போட்டியே நிகழ்ந்து வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட உள்ளன. இதில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக கூட்டணியில் உள்ள திமுக உட்பட வேறு சில கட்சிகளும் கேட்டு வருகின்றன.
பிரேமலதா ஒருபுறம்.. சுதீஷ் ஒருபுறம்.. குழப்பத்தில் நிர்வாகிகள்.. தேமுதிகவில் தொடங்கிய பிரச்சனை!
விசிக
திருவள்ளுவர் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கேட்டு வருகின்றனர். இதே தொகுதியை காங்கிரசும் கேட்கிறது. அதுபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறது ஆனால் அது திமுகவுக்கு ஒதுக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.
திருநெல்வேலி
அதுபோல திருநெல்வேலி தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நீண்ட நாட்களாக கேட்டு வருகிறார். பீட்டர் அல்போன்ஸ் காங்கிரசில் செல்வாக்கு மிக்கவர். திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு அவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டார். அதோடு பீட்டர் அல்போன்ஸ் திமுக தலைமைக்கும் நெருக்கமானவர்.
திமுக நட்பு
கருணாநிதி காலத்தில் இருந்தே அவர் திமுக தலைமையிடம் நெருக்கம் பாராட்டி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் திமுக தலைமைக்கும் ஏதாவது உரசல் ஏற்படும்போது கூட இவர் தலையிடுவது வழக்கமான நிகழ்வு. இந்த நிலையில் பீட்டர் அல்போன்சே ஸ்டாலினிடம் நேரடியாக நெல்லை தொகுதியை தனக்கு வேண்டும் என்று கேட்டதாக செய்திகள் வெளியானது
தொழிலதிபர் வைகுண்டராஜன்
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜனின் மகன் நெல்லை தொகுதியில் போட்டியிடப் போவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. வைகுண்ட ராஜனின் இரு மகன்களில் யாராவது ஒருவர் நெல்லைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறும் அவர்கள் தேர்தல்களின்போது வைகுண்டராஜன் யாருக்காவது ஆதரவு தெரிவிப்பார். ஆனால் இம்முறை தனது மகனை களம் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள்.
இருவரில் ஒருவர்
வேல்முருகன், சுப்பிரமணியன் என்ற இரு மகன்கள் வைகுண்ட ராஜனுக்கு இருக்கிறார்கள் இவர்களில் யாரவது ஒருவர் இங்கு களமிறங்க கூடும். இதற்காக திமுக தலைமையை இவர்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக குழப்பம்
இப்படியாக நெல்லை தொகுதியை இருவேறு முக்கியப் புள்ளிகள் கேட்டு வருவதால் ஸ்டாலின் இந்த தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்குவதா அல்லது தங்கள் கட்சிக்கு வாய்ப்பளிப்பதா என்று குழம்பி போயுள்ளாராம்