ஓபிஎஸ் அனுப்பிய லெட்டர்.. உள்ளே புகுந்த உதயகுமார்.. ஸ்டாலின் "போஸ்டை" பார்த்தீங்களா.. குழப்பம்!
சென்னை: அதிமுகவில் தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இதில் ஆளும் திமுக தரப்பு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சார்பாக ஓ பன்னீர்செல்வம் நலம்பெற வேண்டி போஸ்ட் செய்யப்பட்டது.
அதில், தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்?
இதில் ஓ பன்னீர்செல்வம்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று அழுத்தம் திருத்தமாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த போஸ்ட்தான் மிகப்பெரிய குழப்பத்தை அதிமுகவில் ஏற்படுத்தியது. அதிமுகவில் கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. ஆனால் இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது. தான்தான் இன்னும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளார்.

முறையீடு
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினும்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று ஓ பன்னீர்செல்வத்தை அழைத்துள்ளார். இதனால் எங்கே ஆளும் திமுக தரப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க வில்லையோ.. ஓ பன்னீர்செல்வதற்கு ஆதரவாக இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இடையில்தான் தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கான மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது.. இந்த நொடி வரை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ பன்னீர்செல்வம்தான் இருக்கிறார்.

நீக்கம்
ஆனால் அவரை கட்சியில் இருந்து எடப்பாடி தரப்பு நீக்கியதால், ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணை தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். ஆர்பி உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணை தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கொறடா வேலுமணி தற்போது சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில்தான் ஆளும் தரப்பு அதாவது சபாநாயகர் அப்பாவு இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் முடிவு
முன்னதாக ஓ பன்னீர்செல்வத்தை, ஒருங்கிணைப்பாளர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்தால், எங்கே ஆளும் தரப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஆளும் தரப்பில் உடன் பிறப்புகள் சிலரிடம் விசாரித்ததில்.. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இன்னும் ஓ பன்னீர்செல்வம் நீடிக்கிறார். தேர்தல் ஆணையத்தில் அப்படிதான் இருக்கிறது. அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்கிறார்.

ஆதரவு இல்லை
மற்றபடி ஆளும் தரப்பு யாருக்கும் ஆதரவாக இல்லை. இது முழுக்க அவர்களின் உட்கட்சி விவகாரம். இதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும், என்று திமுக தரப்பு தெரிவிக்கிறது. நேற்று சபாநாயகர் அப்பாவு.. இதில் சட்டப்படி, நியாயப்படி மட்டுமே முடிவு எடுப்போம், யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ நாங்கள் முடிவு எடுக்க மாட்டோம். சட்டசபை விதிப்படி முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சபாநாயகர் முடிவு இப்போதைக்கு எதுவும் எடுக்க கூடாது என்று கோரிக்கை வைத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும் கடிதம் எழுதி உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?
இதில்தான் சட்ட ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் இருக்கிறது. வெளியே என்னதான் அதிமுகவில் பிளவு இருந்தாலும்.. சட்டசபையில் இன்னமும் வேலுமணிதான் கொறடா. புதிய கொறடாவை ஓ பன்னீர்செல்வம் தரப்பு நியமிக்கவில்லை. அப்படி இருக்கும் போது வேலுமணி சொல்பவரை கொறடாவாக நியமிக்க வேண்டிய சூழல் உள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவும் எடப்பாடியின் தரப்பிற்கு இருப்பதால் இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பல சிக்கல்கள் உள்ளன.. இந்த ஒரு முடிவு தேர்தல் ஆணையத்திலும் எதிரொலிக்கும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகரை அதிகம் நம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications