உள்ளே யாரு? காரில் டார்ச் அடித்த போலீஸ்! ஐஓபி வாசலில் சென்னை மாணவியிடம் அத்துமீறல்! சிக்கியது எப்படி
சென்னை: சென்னை பெசன்ட் நகர் பீச்சில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, மிரட்டி பணம் பறித்த ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த பகீர் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே பெசன்ட் நகரில் என்ன நடந்தது?
அடையாறு பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி இரவு, தனது சக நண்பரான ஆதம்பாக்கம் இ.பி. காலனியைச் சேர்ந்த ஆதித்யா ஸ்ரீவத்சன் (20) என்பவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் பீச்
அங்குள்ள ஒரு குறுக்குத் தெரு சந்திப்பில் காரை நிறுத்திவிட்டு, இருவரும் பின் சீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், காரின் அருகே வந்து டார்ச் அடித்து பார்த்துள்ளார்.
காரின் முன் கதவு சரியாகப் பூட்டப்படாததால், அந்த நபர் திடீரென டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டார். தன்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், "நடு இரவில் இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார்.
காரில் டார்ச் அடித்த நபர்
நாங்கள் 2 பேரும் நண்பர்கள் என்று அந்நபரிடம் சொல்லி உள்ளனர்.. ஆனாலும் அவர்கள் கூறியும் கேட்காத அந்த நபர், தனது செல்போனில் அவர்களை போட்டோ எடுத்துள்ளார். மேலும், மாணவி மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டார்.
"நீங்க 2 பேரும் காரில் தப்பாக இருந்தீர்கள், இதை உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்" என்று கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.. உங்க வீட்டில் இதை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், எனக்கு பணம் தேவை என்று மிரட்டி உள்ளார்..
ஐஓபி வங்கி ஏடிஎம்
உடனே மாணவி, தனது வங்கிக் கணக்கிலிருந்து ஜி-பே (GPay) மூலமாக அந்த நபரின் கணக்கிற்கு 3,000 ரூபாயை உடனடியாக அனுப்பியுள்ளார். ஆனால் அத்துடன் விடாத அந்த நபர், காரை தானே ஓட்டிச்சென்று பெசன்ட் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி ஏடிஎம் அருகே நிறுத்தியுள்ளார். மாணவன் ஆதித்யாவை ஏடிஎம்-க்குள் சென்று பணம் எடுத்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
மாணவன் பணம் எடுக்க சென்ற அந்த இடைப்பட்ட நேரத்தில், காரில் தனியாக இருந்த மாணவியிடம் அந்த நபர் மிக மோசமான முறையில் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு ஏடிஎம்-லிருந்து எடுத்து வந்த 8,000 ரூபாயையும் பெற்றுக்கொண்ட அவர், "இதை வெளியில் சொன்னால் உங்கள் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன்" என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஜோசப் சிக்கியது எப்படி
பாதிக்கப்பட்ட மாணவி தொடக்கத்தில் பயந்துபோய் யாரிடமும் சொல்லவில்லை. இருந்தாலும், கடந்த 30-ம் தேதி தனது சகோதரியிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதன் பின்னரே மாணவியின் பெற்றோர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மிரட்டிய நபர் பயன்படுத்திய வங்கி கணக்கு மற்றும் அடையாளங்களை வைத்து அவர் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஜோசப் (30) என்பது தெரியவந்தது. இவர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை காவலர் ஆவார்.
காதல் ஜோடியிடம் கைவரிசை
இதையடுத்து ஜோசப்பை கைது செய்த போலீசார், அவர் மீது அத்துமீறல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜோசப்பை சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மாணவியிடம் மிரட்டிப் பறித்த 11,000 ரூபாய் பணத்தை போலீசார் அவரிடமிருந்து முழுமையாக மீட்டெடுத்த நிலையில், துறை ரீதியான நடவடிக்கையாக அவர் உடனடியாகப் பணி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கைதான ஜோசப் ஏற்கனவே இதுபோன்று பல காதல் ஜோடிகளிடம் கைவரிசை காட்டிப் பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மாணவியிடம் அத்துமீறிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications