சோகம்.. சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடலுக்கு அஞ்சலி செலுத்தாமலேயே திரும்பிய விஜய்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடலுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்த சென்றார். வீடு வரை சென்ற நிலையில் ஆனால் விஜய் அஞ்சலி செலுத்தாமலேயே திரும்பிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் புதிய படப்பிடிப்புக்காக இமாச்சல பிரதேசத்தில் லோகேஷன் பார்க்க வெற்றி துரைசாமி சென்றார்.

கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் அவர் பயணித்த கார் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானார். அவருக்கு என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இதையடுத்து விபத்து பற்றி அறிந்ததும் சைதை துரைசாமி விபத்து நடந்த இடத்துக்கு சென்றார். போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள் கடந்த 8 நாட்களாக வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத் தனிவிமானத்தில் இன்று வெற்றியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர் பாபு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு வெற்றியின் உடல் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டு அஞ்சலி செலுத்தாமல் வீடு திரும்பிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய், வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார். இதையடுத்து வெற்றியின் உடல் வைக்கப்பட்டு இருந்த சிஐடி நகருக்கு அவர் காரில் சென்றார்.

ஆனால் அங்கு அதிகளவில் கூட்டம் இருந்தது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களே கூட்டத்துக்கு நடுவே சிரமப்பட்டு சென்று வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதில் நடிகர் விஜய் அங்கு இறங்கினால் இன்னும் நெருக்கடியான சூழல் ஏற்படும் நிலை இருந்தது. இதனால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் அவர் காத்திருந்தார். ஆனாலும் கூட்டம் குறையவில்லை. இடநெருக்கடியும் அப்படியே இருந்தது.
இதையடுத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் நினைத்தார். இதையடுத்து அதிகளவிலான கூட்டத்தை மனதில் வைத்து அவர் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் வீட்டுக்கு திரும்பினார். மாறாக விஜய் சார்பில் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று வெற்றியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications