அதெப்படி திமுகவுடன் நட்பாக இருக்கலாம்? சி.வி.சண்முகம் வீசிய அணுகுண்டில் நவநீதகிருஷ்ணனின் பதவி காலி
சென்னை: அதிமுக வழக்கறிஞர் அணியின் செயலாளர் பதவியில் இருந்து ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் நீக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த கடும் நெருக்கடிதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் செயலாளர் பதவியிலிருந்து ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணனை நீக்கியிருக்கிறது அதிமுக தலைமை. அவரிடமிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு திமுகவுடன் அவர் நட்புறவில் இருந்து வருவதுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.
கோவாவில் ஆடுகளை போல எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கிய பாஜக... காங். பொளேர் அட்டாக்
ஜெயலலிதா இருந்தவரை திமுகவுடன் சிறிய ரகசிய தொடர்பில் கூட அதிமுக நிர்வாகிகள் இருந்தது கிடையாது. இருக்கவும் மாட்டார்கள். அப்படி திமுகவுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தால் அடுத்த வினாடியே அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்படுவர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அரசியல் நாகரீகத்தை கையாள அதிமுகவினர் விரும்புகின்றனர். ஆனால், இது பெரும்பாலும் அடிக்கடி சர்ச்சையாவது உண்டு.
சி.வி.சண்முகம் கொந்தளிப்பு
அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியதால் தான் நவநீதகிருஷ்ணனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நம்மிடம் மனம் திறந்த அதிமுக சீனியர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணியில் பாஜகவை சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது பற்றியெல்லாம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடியும் பன்னீரும் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனை துவங்கியதுமே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் கோபம் தெறித்தது.
திமுகவுடன் நட்பா?
அதாவது, கட்சியின் கட்டுபபாடுகள் சமீபகாலமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. கட்சியின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக கட்சியின் மூத்த நிர்வாகிகளே செயல்படுவது ஜீரணிக்க முடியாதவையாக இருக்கின்றன. நவநீதகிருஷ்ணன், கட்சியின் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக நமக்கு எதிரி கட்சி. அந்த கட்சியுடன் நமக்கு எதற்கு நட்பு ?
கனிமொழியை பாராட்டுவதா?
நீட் தேர்வு பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திமுக முயற்சித்தது. திமுக ஏற்பாட்டில் எம்.பி.க்கள் குழு அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது. அந்த குழுவில் நவநீதகிருஷ்னன் செல்கிறார். இவர் எப்படி செல்லலாம்? என கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்கின்றனர். அதேபோல, திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அறிவாலயத்துக்கு சென்றார் நவநீதகிருஷ்ணன். அங்கு, ராஜ்யசபாவில் கனிமொழிதான் எனக்கு வழிகாட்டின்னு பேசுகிறார். இதெல்லாம் ஏற்புடையதுதானா? புரட்சித் தலைவி அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா? கட்சியில் கட்டுப்பாடு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சாதாரண நிர்வாகிகள் இப்ப்டி ஒரு விஷயத்தை செய்திருந்தால் தலைமை சும்மா இருந்திருக்குமா? நடவடிக்கை எடுத்திருக்கும் தானே? அதனால் எம்.பி.ன்னு பார்க்ககூடாது. நடவடிக்கை எடுங்கள். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் மற்றவர்களும் கட்டுப்பாட்டை மீறாமல இருப்பார்கள். கட்சியும் கட்டுக்கோப்பாக இருக்கும் என காட்டமாக பேசினார் சி.வி.சண்முகம்.
சி.வி.சண்முகமே காரணம்
அவர் சுட்டிக்காட்டியதை நிர்வாகிகள் பலரும் ஆமோதித்துள்ளனர். இதன் பிறகு, கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சீனிய்ர்கள் கலந்து பேசி, நவநீதகிருஷ்னனின் கட்சி பதவியை முதலில் பறிப்பது என முடிவு செய்யப்பட்டது'' என்று விரிவாக நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். சி.வி.சண்முகம் போட்ட அணுகுண்டு நவநீதனின் கட்சி பதவியை பறித்திருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.