கூட்டணி தர்மம்.. வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின்படி நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனையடுத்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக பொது சிவில் சட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கிறது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு இது ஆபத்து என கூறியிருந்தார். இதேபோல திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட போது, கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்ட விவகாரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன?'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தபழனிசாமி, ''கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பான வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. அதுதான், அதிமுகவின் நிலைப்பாடு'' என்று தெரிவித்தார்.
அதிமுகவின் 2019 தேர்தல் அறிக்கையில், 'பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்பு சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பத்துக்குரிய மதத்தை பின்பற்றுவதற்கும், அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 25, 26-வது பிரிவுகளுக்கு அதிமுக உரிய மதிப்பளிக்கிறது. சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒரே சீரான உரிமையியல் விதி தொகுப்புக்காக, அரசமைப்பு சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என்று மத்திய அரசை அதிமுகவலியுறுத்தும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொது சிவில் சட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு இல்லை என்பதை பழனிசாமி கடந்த ஜூலை மாதமே சூசகமாக தெரிவித்திருந்தார்.
அதிமுக 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பொது சிவில் சட்டத்தை ஆதரித்தது. கடந்த 2003ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், அரசியல், சமூக, இயற்கையின் நியதிப்படி நாட்டின் இன்றைய மிக முக்கிய அவசியமாக பொது சிவில் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரித்து வாக்களிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முழுமையான ஆதரவு என சொன்ன ஜெயலலிதா இதனைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நாடு முழுவதிலும் ஒரே மாதியான சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது இந்த நேரத்தில் அவசியமானது. அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த சட்டம் அவசியமான ஒன்று. இதனால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட இந்தச் சட்டம் வழி செய்யும் என உறுதியாக கூறியிருந்தார் ஜெயலலிதா.
தமிழக சட்டசபைகூட்டத் தொடர் நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. இன்றைய தினம் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 14, 1998 அன்று கோவை குண்டு வெடிப்பில் பலர் பலியாகி உள்ளார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர், 20 பேர் பல்வேறு சமூககுற்றவழக்குகளில் சிறையில் உள்ளனர். அக மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
திமுக ஆட்சியில் 15-11-2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன் விடுதலை ஆவது தடைப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றனர். இவர்களில் இரு சிலர் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.
20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளின் வயது மூப்பு உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமாறு வலியுறுத்துகிறேன் என கூறினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இறுதியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் கேட்கும் ஒரே கேள்வி நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு எனன காரணம்? அதை நான் அறிய விரும்புகிறேன் என்று கூறினார். ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்மூடி ஆதரித்த அதிமுக, இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர்பாசம் ஏன் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும் என கூறினார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேச அனுமதி தரவில்லை எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என கூறினார். ஆனால் அதற்கு சட்டப் பேரவை தலைவர் எனக்கு பதில் அளிக்க அனுமதிக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ரமலான் நோன்புக்கு ஆண்டுதோறும் 5400 டன் அரிசி, ஹச் பயணம் மேற்கொள்ள 8 கோடி நிதி, ஹச் இல்லம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், நாகூர் தர்கா குளக்கரை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்காக கொண்டு வந்தது.
சட்டப்பேரவை தலைவர் எங்களை பேச அனுமதி தராத காரணத்தால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் கோட்டை மேட்டில் ஆயிரக்கணக்கான காவலர்கள் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த 19 பேர் இறந்தார்கள். கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி 19 பேரை சுட்டு வீழ்த்தியதுதான் திமுக அரசு.
கோவை குண்டு வெடிப்பில் சிறையில் இருந்த மீரான் என்ற சிறைவாசி அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டார். பாபர் மசூதி இடிக்கும் போது இந்தியாவே பற்றி எரிந்தது ஆனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. எந்த ஒரு சிறுபான்மை மக்களும் பாதிக்காத அளவுக்கு அதிமுக அரசு இருந்தது.
இஸ்லாமியரான அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக்கியது அதிமுகதான். எதிர்த்து வாக்களித்தது திமுகதான். இவர்கள் இஸ்லாமியர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்பதை இஸ்லாமியர்கள் எண்ண வேண்டும். முதலமைச்சர் இவ்வளவு கோபப்படுவதற்கு என்ன காரணம். முதலமைச்சருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்றார்.
அதிமுக பாஜக இடையே கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம் என்று கூறியுள்ளார்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒருவித கனத்த மவுனத்துடன் இருந்த அதிமுக 2019 லோக்சபா தேர்தல் அறிக்கையில் அதை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தது. அந்த தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்தல் அறிக்கையை வழிமொழிந்து மீண்டும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications