பாஜகவின் எதிர்ப்பால் ராஜ்யசபா சீட் மறுப்பு? அதிமுகவில் தம்பித்துரை ஓரம் கட்டப்படுகிறாரா தம்பித்துரை
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தம்பித்துரை தோற்றுப்போன நிலையில், இப்போது ராஜ்யசபா எம்பி சீட்டினை அதிமுக தலைமை அவருக்கு தரவில்லை. பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிவந்த தம்பித்துரை இப்போது அதிமுகவில் ஓரம்கட்டப்படுகிறாரா என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், அதிமுக 3 இடங்களிலும் திமுக இடங்களிலும் வெற்றி பெற முடியும்.
இதில் திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் நேற்று வேட்பாளரகள் இறுதி செய்யப்பட்டனர். தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது அதிமுக. அதன்படி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவிக்கப்பட்டார்.
முகிலன் கடத்தப்பட்டிருந்தாரா.. ஜெயக்குமாருக்கு நிருபர்கள் கேள்விக் கணை.. பதில் இதுதான்
தம்பிதுரை விருப்பம்
இந்நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவியது. இந்த இடங்களை தங்களுக்கு தரும்படி தம்பிதுரை, கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன், கோகுல இந்திரா, சிவபதி, அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்பட ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். நேற்று அதிமுக ராஜ்யசபா எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
தம்பிதுரைக்கு மறுப்பு
இந்த கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவரான தம்பிதுரைக்கு எப்படியும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எம்பி சீட் மறுக்கப்பட்டுள்ளது.
பாவம் செய்தோம்
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைக்க தம்பிதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாஜகவை தோளில் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையும்மீறி தான் அதிமுக பாஜக கூட்டணி வைத்தது.
பாஜகவுடன் சுமூக உறவு
எடப்பாடியுடன் இருந்த நெருக்கதால் லோக்சபா தேர்தலில் கரூரில் மீண்டும் போட்டியிட சீட் வாங்கிய தம்பித்துரை தோற்றுப்போனார். ராஜ்யசபா தேர்தல் மூலம் எம்பியாக தம்பித்துரை விரும்பினார். ஆனால் பாஜக தலைமை எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லையாம். இன்னும் இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் உள்ள நிலையில் பாஜகவுடன சுமூகமான உறவை கடைபிடிக்க எடப்பாடி விரும்புகிறார். இதனால் பாஜகவின் எதிர்ப்பை மீறி தம்பித்துரைக்கு சீட் கொடுக்கப்படவில்லையாம். இதனால் தான் தம்பிதுரை கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.