அவங்க கட்சியை உடைந்து இருக்கு.. ஆனா அதுக்கும் எம்.டி. ஸ்டாலின் தான்! அதிமுகவை சீண்டிய அன்பில் மகேஷ்
சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அதிமுகவை சீண்டும் வகையில் பேசினார். அதிமுகவுக்கும் இப்போது எம்டி ஸ்டாலின் தான் என்று கூறிய அவர், அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்தார்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 2500 நபர்களுக்கு ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்பில் மகேஷ்
இதில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நமது ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்குப் புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எழில் பாண்டியன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார். அதன் பிறகு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அதிமுகவை விமர்சித்துப் பேசினார்.

அதிமுகவை சீண்டி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "மொழிக்காக வாழ்ந்த பெரியவருக்குத் தான் இந்த நூற்றாண்டு விழா. அவர்தான் இனமான பேராசிரியர் க. அன்பழகன்.. இன்று இருக்கும் ஒரு கட்சி ஏற்கனவே இரண்டா மூன்றா அவ்வளவு ஏன் நான்காகக் கூட உடைந்துவிட்டது. அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றனர். அந்தக் கட்சியெல்லாம் ஒரு கட்சியே கிடையாது.. அது கம்பெனி. இதை நான் சொல்லவில்லை.. அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்..

எம்டி ஸ்டாலின்
அது கட்சியோ நிறுவனமோ எல்லோத்திற்கும் சேர்த்து நிறுவனர் என்று ஒருவர் இருப்பார். அதேபோல எம்டி என ஒருவர் இருப்பார். அந்த கம்பெனிக்கும் எம்.டி. நம்ம முதல்வர் ஸ்டாலின்தான். எம்.டி.என்றால் மேனேஜிங் டைரக்டர் இல்லை, மோஸ்ட் டேன்ஜிரஸ் என்று எச்.ராஜா சொல்வாரே அதுதான். ஸ்டாலின் கருணாநிதியை விட மோஸ்ட் டேன்ஜிர் என்ற எச். ராஜா சொன்னாரே. அப்படித்தான் அதிமுகவுக்கு எம்டியாக நம்ம முதல்வர் உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
மக்களின் நம்பிக்கையாக எப்போதும் திமுக இருக்கும்.. நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரைக் காட்டிலும் தமிழ்நாடு நம்பர் ஒன் வந்தால்தான் எனக்கான பெருமை என்று உழைத்துக் கொண்டிருக்கிறவர்தான் நமது முதல்வர்... தலைநகர் சென்னையில் அடித்த மழையில் தண்ணியும் நிற்கவில்லை.. எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனமும் நிற்கவில்லை.. அந்தளவுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறவர் நமது முதலமைச்சர்.. நாளை நமதே நாற்பதும் நமதே" என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சுப்ரமணியன்
அவரை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், "சென்னையில் இப்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.. இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் முடிந்த பின்பு இந்த சாலைகளைப் பயன்படுத்தும்போது வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற போன்று உணர்வார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியே பயனாளிகளுக்கான திட்டத்தை இன்னும் நான்கு ஐந்து நாட்களில் திருச்சியில் உள்ள சன்னியாசிபட்டியில் தமிழக முதல்வர் தரவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்" என்று அவர் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேமுதிகவில் இருந்து விலகி விஜயகுமார் என்பவர் தலைமையில் 100 பேர் அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications