ரஜினி, கமல் மவுனம் ஏன்? ஜெயலலிதா, மணியம்மை பெண் தலைவர்கள் இல்லையா? விஜய் தடுமாற்றம் ஏன்?
சென்னை: விஜய் மாநாடு பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்த்தும் மவுனமாக இருந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லிக் கடந்த 2020 மார்ச் மாதம் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது அந்தச் செய்தி தலைப்புச் செய்தியாக மாறியது. அவர் கட்சி தொடங்குவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தன் உடல்நிலை சரியில்லை என்றும் கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணிப்பது நடைமுறைக்குப் பொருந்தாத காரியம் என்றும் சொல்லி நிரந்தரமாக அரசியலை விட்டு ஒதுங்கினார்.

அதன்பின்னர் அரசியல் பக்கம் தலைவைக்கமாட்டார் என நினைத்தபோது மறைமுகமாக மோடி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அது பலரையும் விமர்சிக்க வைத்தது. ஸ்டாலின் முதல்வராகும் வரை அவரை ஆதரித்து ரஜினி ஒரு கருத்தையும் சொல்லவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகள் கழித்த பிறகு திமுகவுடன் நல்ல உறவை வைத்துக் கொண்டார்.
மற்றொரு பக்கம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று மோடியின் ஆதரவாளர் என்பதையும் காட்டிக்கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ஏ வ வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, கட்சியில் சீனியர்கள் ஆதிக்கம் பற்றி விமர்சத்தி பேசினார். ஸ்டாலின் ஆட்சிக்கு வர முயன்றபோது எதையும் சொல்லாத ரஜினி, ஸ்டாலின் முதல்வரான பிறகு சீனியர்கள் பற்றி கவலை கொண்டார்.
உண்மையில் அரசியல் மாற்றத்தை அவர் செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் புதியதாக அவர் துறையைச் சேர்ந்த விஜய் வந்தபோது அவரை வாழ்த்தி இருக்கவேண்டும் என சிலர் கருத்து கூறினர். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்டபிறகு 2 மாதங்கள் முன்னதாக ஒரே வரியில் விஜய் கட்சிக்கு வாழ்த்து சொன்னார்.
விஜய்க்கு ரஜினிக்கும் ஏற்கெனவே காக்கா கதை மூலம் ஒரு சர்ச்சை ஆரம்பித்தது. யார் சூப்பர் ஸ்டார் என்பது பற்றி இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. அதை வெளிப்படையாகக் கதையாகச் சொன்னார் ரஜினி. அப்பா சட்டையைப் போட்டுக் கொண்டு இருப்பது குழந்தைக்கு ஒரு சந்தோஷம் என்று அதற்கு தனது ஆடியோ விழாவில் விஜய் பதிலடி கொடுத்தார்.
இதேபோலத்தான் கமல்ஹாசன் கட்சித் தொடங்கியபோது ரஜினி பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை. அவருடன் கூட்டணி வைப்பீர்களா? என கமல்ஹாசனைக் கேட்டபோது அவர் ஆர்வமாக இருந்தார். ரஜினி ஏனோ அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாகக் களம் மாறியபோது கமல் விழித்துக் கொண்டார். அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார். கட்சித் தொடங்கப் போகிறார் என நினைத்த போது 'ஊடக உந்துதலுக்காகக் கட்சி தொடங்க முடியாது' என்றவர் அடுத்து உடனடியாக கட்சித் தொடங்கினார்.
இப்போது இவர்கள் இரண்டு பேரும் அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவைப் பெறவில்லை. கமல்ஹாசன் தனது பொதுக்கூட்டத்தை நடத்திய அதில் இதேபோல ராம்ப் வாக் போட்டார். மேலும் தனது கட்சியைச் சார்ந்த பெண்மணி ஒருவரை கொடி ஏற்றவைத்தார். அவர் ஒரு இஸ்லாமியர். தலைவர்தான் கொடி ஏற்றவேண்டுமா? ஒரு பெண் அதைச் செய்யக்கூடாதா? என்று சொல்லி விளக்கம் அளித்தார்.
இப்போது விக்கிரவாண்டியில் விஜய் அதே ஸ்டைலில் ராம்ப் வாக் நடத்தி மாநாடு போட்டுள்ளார். ஒரு பெண் தொண்டருக்குக் கட்சியின் கொள்கைகளைப் படிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் ஒரு இஸ்லாமியப் பெண்ணை தன் அருகில் அமர வைத்து பதவி வழங்கி இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இதை எல்லாம் கமல்ஹாசன் எப்போதோ செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அரசியலில் கொஞ்சம் கமல்ஹாசன் பாணியையும் பேச்சில் கொஞ்சம் ரஜினி ஸ்டைலையும் எடுத்துக் கொண்ட விஜய் இப்போது திமுக கொள்கையில் 60%, தலித் அமைப்புகளில் 10%, அதிமுகவில் 20% , வன்னியர், காங்கிரஸ், நாடார், தேவர் 10% என எடுத்துக்கொண்டுள்ளார். பலரும் இவரது கட்சியின் கொள்கை அவியல் மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.
தன் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே கூட்டணிக்கு அழைப்பு விடுகிறார். விஜயகாந்த்துக்குப் படத்தில் நன்றி சொன்ன விஜய், மேடையில் அவர் கட்சி பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லை. விஜயகாந்த் கட்சியின் மகளிர் அணியின் நிறமே மஞ்சள், சிவப்புதான். அதையே தன் கட்சியின் நிறமாகப் பயன்படுத்துகிறார் விஜய். தேமுதிக மஞ்சள், சிவப்பு, கருப்பு வண்ணங்களின் கலவை. இவர் கருப்பை மட்டும் நிராகரித்திருக்கிறார். ஆக, பல கட்சிகளின் கூட்டுதான் விஜய்.
யாருமே கட்சிக்குப் பெண்ணை முன்னிலைப் படுத்தவே இல்லை என்கிறார். ஆகவே வேலு நாச்சியார் கட் அவுட், அஞ்சலை அம்மாள் கட் அவுட் என வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பெண் தலைவராக ஜெயலலிதா மிகப்பெரிய ராஜாங்கத்தை நடத்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் சோனியா காந்தி இருந்துள்ளார். இதை எல்லாம் தாண்டி திமுகவின் தாய் இயக்கமான திராவிடர் கழகத்தில் தலைவரே மணியம்மைதான். பெரியார் ஒரு பெண்ணிடம்தான் தனது கட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
இவ்வளவு குழப்பங்கள் விஜய்யின் கட்சிக்குள் கொள்கைக்குள் உள்ளன. அதையே அவரது பேச்சும் காட்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் விஜய் பலத்தை நிரூபிக்கும்வரை வாய் திறக்கக் கூடாது என்று ரஜினியும் கமல்ஹாசனும் அமைதியாக இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications