கோவில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிட தயங்குவது ஏன்.. நிலம் வாங்குபர்களுக்காக ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் வழிப்பறி செய்து விடுவார்கள் என்பதற்காக யாராவது தங்க நகை அணியாமல் செல்கிறார்களா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தி்ல் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன் மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே வருவாய்துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறிய முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
தங்க நகை அணியாமல் இருப்பார்களா
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன் , "நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் வழிப்பறி செய்து விடுவார்கள் என்பதற்காக யாராவது தங்க நகை அணியாமல் செல்கிறார்களா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது?
எச்சரிக்கையாக இருப்பார்கள்
சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? கோவில்களின் சொத்துகளை அனைவரும் தெரியும் வண்ணம் இதுபோல வெளியிடும்போது, நிலங்களை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா? மனுதாரர் அறநிலையத்துறையின் தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்கிறார். அதை வெளியிடுவதில் என்ன பிரச்சனை உள்ளது? அறநிலையத்துறை கமிஷனரின் தனிப்பட்ட விவரங்களையோ, அதிகாரிகளின் சொத்து விவரங்களையோ வெளியிட வேண்டும் என சொல்லவில்லையே?'' என்று சரமாரியாக நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
அறநிலையத்துறை மறுக்க முடியாது
தொடர்ந்து நீதிபதி கூறுகையில், மனுதாரர் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியாக பொது ஆவணங்கள் ஆகும். அவற்றை வெளியிட முடியாது என அறநிலையத்துறை மறுக்க முடியாது. எனவே, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும்? எந்தெந்த தகவல்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணையை நவம்பர் 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications