ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது எதற்காக? அப்படி என்ன கோரிக்கைகள்? மாணவர்களின் நிலை?
சென்னை: தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள ஆசிரியர்கள் போராட்டம் எதற்காக நடைபெறுகிறது, என்ன கோரிக்கைகளை அவர்கள் அரசுக்கு முன் வைக்கிறார்கள் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
3 சங்கங்கள்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு அளிக்கக் கோரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக் கூடாது என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் கடந்த ஒரு வாரகாலமாக சென்னையில் முகாமிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.

ரூ.2500 ஊதிய உயர்வு: இவர்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் ஈடுபட்டனர். ஆனால் எதற்கும் மசியாமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என பிடிவாதம் பிடித்தனர். இதையடுத்து ஆசிரியர் சங்கத்தினருடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மத்திய அரசு: பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் மாநில அரசு செயல்படுத்தியதாகும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு வாரத்தில் மூன்று அரை நாட்கள் அதாவது மொத்தமே ஒன்றரை நாட்கள் தான் பணி. ஓவியம், கணிணி பயிற்சி, தையல், உள்ளிட்ட பாடங்களை இந்த பகுதி நேர ஆசிரியர்கள் எடுப்பார்கள்.
பணி நிரந்தரம் செய்யக்கோரும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும் போராட்டத்தின் பயனாக ரூ.2500 ஊதிய உயர்வு கிடைத்திருப்பதால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டனர். கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் கொண்டு வரப்பட்டது. ரூ.5,000ல் ஆரம்பித்த மாத ஊதியம் 50 முறைக்கு மேல் போராடி இப்போது ரூ.10,000ல் இருந்து ரூ.12,500 ஆக அதிகரித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம்: அதேபோல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் அரசின் உறுதியை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் மட்டுமே போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதற்கு காரணம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரும் அவர்களது கோரிகையே ஆகும்.இப்போது அவர்களும் அரசின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டனர்.
ஊதிய முரண்பாடு எவ்வளவு?: அதென்ன சமவேலைக்கு சம ஊதியம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம், கடந்த 2009 மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 என்பது அடிப்படை ஊதியமாகவும், அதற்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியமாகவும் வழங்கப்படுகிறது. சுமார் ரூ.3,000 இதில் ஊதிய முரண்டுபாடு உள்ளது.
9ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது தான் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையாகும். இடைநிலை ஆசிரியர் சங்கத்தில் 20,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். காலாண்டு விடுமுறை முடிந்து 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் வரும் திங்கள்கிழமை முதல் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்பவுள்ளனர்.












Click it and Unblock the Notifications