களமிறங்கிய அமெரிக்கன் டீம்.. இந்தியாவில் நடந்த ஏர்இந்தியா விபத்தை.. அமெரிக்கா விசாரணை செய்வது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் 171 (Air India flight 171) வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளின் நிபுணர்கள் அகமதாபாத்துக்கு வந்துள்ளனர். இதில், அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் ஐக்கிய ராஜ்யத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAA) ஆகிய அமைப்புகளின் அதிகாரிகளும் அடங்குவர்.

விபத்து விசாரணையில் வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு

இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இந்தியாவில் விபத்துக்குள்ளான நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அமைப்புகள் விசாரணையில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

Why are US investigators probing the Ahmedabad Air India Plane Crash

இதற்கான பதில், உலகளாவிய விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் 78 ஆண்டுகள் பழமையான சர்வதேச ஒப்பந்தத்தில் உள்ளது. இது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து மாநாடு (Convention on International Civil Aviation) அல்லது சிகாகோ மாநாடு (Chicago Convention) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போர் முடிவடைவதற்கு சற்று முன்பு 1944-ல் கையெழுத்தானது. விமானப் போக்குவரத்து விரைவில் உலகம் முழுவதையும் இணைக்கும் என்று நம்பியவர்கள், விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இன்று, மாண்ட்ரீலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஒரு அங்கமான சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) உருவெடுத்து உள்ளது. உலக நாடுகள் அனைத்து இந்த மாநாட்டின் விதிகளைப் பின்பற்றுகிறதா என்பதை இந்த அமைப்பே உறுதி செய்கிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் 190 பிற நாடுகள் இந்த விதிகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இணைப்பு 13 (Annex 13) ஆகும். இது விமான விபத்துகள் ஏற்படும் போது அதை நாடுகள் எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

விசாரணையின் முக்கிய நோக்கம் யாரையும் குற்றம் சாட்டுவது அல்ல. மாறாக, என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அது மீண்டும் நிகழாமல் தடுப்பதன் மூலம் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

விசாரணையில் யார் பங்கேற்க உரிமை உண்டு?

அத்தியாயம் 5-ன் படி, விபத்து நடந்த நாடு State of Occurrence என்று அழைக்கப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பு இந்த நாட்டிற்கு உள்ளது. ஆனால் மற்ற நாடுகளுக்கும் இதில் பங்கேற்க உரிமை உண்டு. அவை:

விமானம் பதிவு செய்யப்பட்ட நாடு (State of Registry),
விமான நிறுவனம் அமைந்துள்ள நாடு (State of the Operator),
விமானத்தை வடிவமைத்த நாடு (State of Design), மற்றும்
விமானம் மற்றும் அதன் பாகங்கள் தயாரிக்கப்பட்ட நாடு (State of Manufacture).

ஏர் இந்தியா விமானம் 171 விபத்து இந்தியாவில் நடந்ததால், இந்தியா State of Occurrence நாடாகிறது. இதன் பொருள், இந்த விசாரணையை இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) வழிநடத்தும். இது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியாவில் அமைந்துள்ளது. விமானமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமானம் அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அதோடு, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் என்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. ஆகையால், அமெரிக்கா, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நாடு என்ற அடிப்படையில் விசாரணையில் பங்கேற்க உரிமை பெற்றுள்ளது. அதனால்தான் NTSB மற்றும் FAA அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளன. போயிங் நிறுவனமும் அமெரிக்க விசாரணை குழுவின் ஒரு பகுதியாக தனது நிபுணர்களை அனுப்பலாம்.

இந்த விமானத்தில் 53 பிரிட்டன் நாட்டவர்கள் இருந்ததனால், இங்கிலாந்தும் இந்த விசாரணையில் பங்கேற்கிறது. சர்வதேச விதிகளின்படி, விபத்தில் இறந்தவர்களின் நாட்டைச் சேர்ந்தவர்களும் விசாரணையில் பங்கேற்கலாம். இந்த சர்வதேச நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடவும், உடைந்த பாகங்கள் மற்றும் பிற ஆதாரங்களைப் படிக்கவும், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், இறுதி அறிக்கையைப் பெறவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது இயல்பானது மற்றும் அவசியமானது

இதுபோன்ற சர்வதேச உதவி என்பது தலையிடுவது கிடையாது. இது மிகவும் முக்கியமானது. இது விசாரணையை ஆழமாகவும், தொழில் ரீதியாகவும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கும். இன்று, விமானங்கள் உலகம் முழுவதும் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமான மாதிரி 50 வெவ்வேறு நாடுகளில் உள்ள விமான நிறுவனங்களால் இயக்கப்படலாம். ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தவறு மற்றொரு நாட்டில் உயிர்களைக் காப்பாற்றக்கூடும்.

உதாரணமாக, இந்தியாவில் நடந்த ஒரு விபத்து இந்தோனேசியாவில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விபத்தைத் தவிர்க்க உதவும். டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப பிரச்னை, டெட்ராய்டில் ஏற்படவிருந்த மரணங்களைத் தடுக்கலாம்.

இதனால்தான் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் செல்கிறார்கள். ஒன்றிணைந்து செயல்பட்டு, உலகளாவிய விமானப் பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. இந்தியா இதற்கு முன்பு இதை செய்துள்ளது. 2010-ல் மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானபோது, இந்திய அதிகாரிகள் NTSB-யிடம் உதவி கேட்டனர், அமெரிக்க குழு விசாரணையில் பங்கேற்றது.

விமானப் போக்குவரத்து விபத்துகள் குறித்த விசாரணையில் சர்வதேச ஒத்துழைப்பு என்பது, உண்மைகளை வெளிக்கொணர்ந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க எடுக்கப்படும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+