கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகளுடன் இணைப்பு ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சென்னை: சட்டசபை கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் ஊராட்சிகள் இணைப்பு ஏன் என்பது குறித்து பதில் அளித்த நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சிகளுடன் இணைப்பதில் விருப்பம் இல்லை என்றால் அதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் 120 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றார்.
கோவை மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு சில ஊராட்சி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மலுமிச்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நேற்று காலையில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். சில கடைகளுக்கு முன்பு கருப்பு கொடியும் கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டமானது மாலை 6 மணி வரை நடந்தது.

இதேபோல் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் கடந்த ஜனவரி 7ம் தேதி மறியல் போராட்டமும் நடத்தினார்கள்.. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கே. கள்ளிக்குடி ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களும், குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வசிக்கின்றனா்.
இதன் காரணமாக இந்த ஊராட்சி உள்பட 22 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே கிராமங்களை நகரங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில் நேற்று சட்டசபை கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன் " ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. ஊராட்சிகள் எந்த வகையில் இணைக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் 371 ஊராட்சிகளை மட்டுமே நகர்ப்புற அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைப்பதில் விருப்பம் இல்லை என்றால் அதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் 120 நாட்களுக்குள் கூறினால் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இல்லாமல் போய் விடும் என ஊராட்சிகளில் உள்ள மக்கள் நினைக்கின்றனர். ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத இடங்களையே நகர்ப்புற அமைப்புகளோடு இணைக்கிறோம்" என்று கூறினார்.
அதேநேரம் கிராம மக்கள் கூறும் போது, ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும்போது வரி அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்தனர். 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது என்பது பெரிய கவலையாக உள்ளது. கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களால் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கும் போது அவர்களுக்கும் வாடகை அதிகரிக்கும் என்ற கவலை உள்ளது. பொதுவாகவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சரிவர குடிநீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கிராம மக்கள், ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளுக்கே, மாநகராட்சி நிர்வாகங்கள் நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகளை ஏற்படுத்த நிதியில்லாமல் திணறுவதாக ஆதங்கப்பட்டனர். வரிகள் அதிகரிக்குமே தவிர, தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்காது என்றே கிராம மக்கள் பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications