இதை கவனிச்சீங்களா.. எடப்பாடி பழனிசாமிக்கு வராத வாழ்த்து.. சைலண்ட் மோடில் பாஜக.. பின்னணி!
சென்னை: ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஏன் திருமாவளவன் உள்பட திமுக கூட்டணியில் உள்ள தலைவர்களும் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் அண்ணாமலை வாழ்த்து சொல்லவில்லை. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை11ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுத்ததற்கு பாஜக தரப்பில் இருந்து யாரும் எடப்பாடிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி பாஜக சார்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாருமே எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கூறவில்லை.
அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளரான தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்து, வேட்பாளரை வாபஸ் பெறுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதன் பேரில் தான் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார். அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாஜகவின் உறுதியை நம்பி வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுச்செயலாளர்
இது ஒருபுறம் எனில், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் பாஜக தலைமை சைலண்ட் மோடில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அவருக்கு பாஜக தரப்பில் எந்த வாழ்த்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஓ பன்னீர்செல்வம்
ஒரு பக்கம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். ஓ பன்னீர்செல்வம் , மறுபக்கம் முழுமையாக அதிமுகவினை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் வெற்றி பெற்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே சசிகலாவும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் ஓ பன்னீர்செல்வமும் இணைந்துள்ளார். இருவரும் சட்டப்போராட்டம் நடத்தினாலும் பெரிய பலன் இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். ஏற்கனவே வைகோ சட்டப்போராட்டம் நடத்தி கைகூடததால் தான் தனிக்கட்சி தொடங்கினார். டிடிவி தினகரன் தரப்பும் சட்டப்போராட்டம் பலன் அளிக்காததால்தான் தனிக்கட்சி தொடங்கினார். எனவே ஓ பன்னீர்செல்வம் நடத்தும் சட்டப்போராட்டம் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். அதனால் தான் ஓ பன்னீர்செல்வம் சட்டப்போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களை சந்தித்து முறையீடுவேன் என்றும், எங்கு தீர்ப்பை பெற வேண்டும் அங்கு பெறுவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

கவனமாக இருக்கிறதாம்
இதற்கிடையே சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் மூன்று பேரையும் ஓரம்கட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் எந்த மாதிரி முடிவெடுப்பார் என்பது பாஜக தலைமையை யோசிக்க வைத்துள்ளதாம். தேசிய அளவில் பாஜக சிவசோனவின் ஷிண்டே அணியை தவிர பெரிய அளவில் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. தற்போது அதிமுகவையும் பலவீனப்படுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக எண்ணிக்கையில் எம்பிக்களை ஜெயிப்பது கடினமாகிவிடும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரிய சிக்கலை பாஜக மேலிடம் தரவில்லையாம். ஆனால் அதேநேரம் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை கழட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி மீது எச்சரிக்கையாக இருக்கிறதாம் பாஜக மேலிடம். அதேநேரம் அண்ணாமலை வாழ்த்து சொல்லாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறார்கள் பாஜக தரப்பினர்.

அர்த்தம் கிடையாது
எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலின் பாஜக உடன் கூட்டணி தொடரும் என்றே சொன்னார். அதேநேரம் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது. ஓட்டுக்கள் சிதறக்கூடாது என்றே கூட்டணி வைக்கிறோம் என்று தெளிவாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய்நகர்த்தி வரும் பாஜக, எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாவே இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications