"முதல்வர் செய்தது தவறு.." ஆவேசமான குஷ்பூ.. மக்களவை தேர்தலில் என்ன பிளான்! அவர் சொன்ன பதிலை பாருங்க
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, அமித் ஷாவின் பயணம் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக இப்போது தேர்தலை முன்னிட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. மீண்டும் இந்த முறை ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூட சென்னை வந்திருந்தார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செய்யவுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, பாஜக கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார். திமுக காங்கிரஸ் மத்தியில் இருந்த போது எந்தவொரு திட்டமும் தமிழகத்திற்கு வரவில்லை என்றும் அவர் சாடியிருந்தார். இதில் அவர் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று சொன்னது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவும் அமித் ஷா பேச்சைக் குறிப்பிட்டு சில கருத்துகளைக் கூறியுள்ளார். மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முதல்வர் தவறிவிட்டார் என்றும் இதனால் பலர் பயன் பெற முடியாமல் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவின் வருகை என்பது தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாங்கள் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், அதற்காக எங்கள் வளர்ச்சிக்கு வேலை செய்யக் கூடாது என்று எதுவும் இல்லை. கூட்டணி கட்சியினர் அவர்கள் பணிகளைச் செய்வார்கள். நாங்கள் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
கடந்த 9 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என முதல்வர் கேட்கிறார். எய்ம்ஸ் கட்டுமானத்தை மட்டும் அவர் குறிப்பிடுகிறார். அதைத் தவிர மத்திய அரசு தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதைத் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இது முதல்வர் மற்றும் திமுக அரசின் தவறு தான். நான் அவர்களைத் தான் குற்றஞ்சாட்டுகிறேன்.
மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து திமுக அரசு கவலைப்படவில்லை. அல்லது தெரிந்தும் அது மக்களுக்குச் சென்று சேர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே நாம் கூற வேண்டும். தமிழ்நாட்டிற்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் தற்போதைய முதல்வர் என்ன செய்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா சரியாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களைப் பார்க்கச் செல்லும் போது மின்தடை ஏற்பட்டுள்ளது. அவர் எப்போது வருகிறார், எந்த வழியாகச் செல்கிறார் என அனைத்து பயணத் திட்டமும் தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் பொது பெரியளவு மழை கூட இல்லாத போது மின்தடை ஏற்பட்டது. இதில் தங்களுக்குத் தொடர்பில்லை எனத் தமிழக அரசு சொல்வதை ஏற்க முடியவில்லை.
அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதைக் கட்சித் தலைமை முடிவு செய்யும். எனக்குப் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்தும் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். என்னைப் பொறுத்தவரை நான் நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய ரெடியாகவே இருக்கிறேன். மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளது தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இது எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பது வரும் தேர்தலில் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications