சமூகநீதி.. அடுத்தடுத்து ஸ்டாலின் போட்ட 2 உத்தரவை.. பட்டென வரவேற்ற பாஜகவின் டாப் தலைகள்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு முக்கியமான உத்தரவுகளை பாஜக திடீரென வரவேற்று இருக்கிறது. பாஜகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்து இருக்கிறது. கொரோனா பரவலை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்தது. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டது.
இதை காரணம் காட்டி தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் பாஜக இதை கடுமையாக எதிர்த்து இருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது. உடனே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது.

எதிர்ப்பு
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். இந்து பண்டிகைகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எல்லாம் இயங்குகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. அங்கு மட்டும் கொரோனா பரவாதா? விநாயகர்தான் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் கை வைத்தால் திமுகவின் ஆட்சி கலையும். எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

ஆதரவு
விநாயகர் சிலை ஊர்வல விஷயத்தில் பாஜக திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருந்தாலும் வேறு இரண்டு முக்கியமான விஷயங்களில் பாஜக திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
முதல் விஷயம், அனைவரும் அர்ச்சகர் ஆகும் திட்டம். கடந்த மாதம் 14ம் தேதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை மயிலாப்பூரில் துவங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழ்நாடு முழுக்க பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திட்டத்தை வரவேற்று பேசினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம். இதை பாஜக ஆதரிக்கிறது.

பாராட்டு
பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியுள்ளது. இதில் நல்ல அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி ஆட்சி நடத்தி வருகிறார்கள். எந்த ஒரு ஆட்சிக்கு 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று திமுக ஆட்சியை பாராட்டும் வகையில் பேசி இருந்தார். மிகப்பெரிய சமூகநீதி திட்டத்தை பாஜக இப்படி சட்டென ஆதரித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டம் பாஜகவில் சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட சில தலைவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும் தமிழ்நாடு பாஜக இதை ஆதரித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

ஆச்சர்யம்
இரண்டாவது விஷயம், இன்று பாஜக நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அரசின் "சமூக நீதி நாள்" குறித்த அறிவிப்பை வரவேற்றார். பாஜக உறுப்பினர்கள் யாருமே இன்று அவையில் முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு எதிராக பேசவில்லை. இன்று அவையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். சமூக நீதி என்பது பாஜகவின் கொள்கை. எங்களின் கொள்கையும் அதுதான். பெரியாருக்கும் இதுவே கொள்கையாக இருந்தது. இதனால் அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதை வரவேற்கிறோம், என்று குறிப்பிட்டார்.

மோடி
செப்டம்பர் 17ம் தேதிதான் பெரியார் பிறந்தநாள். இதை தமிழ்நாடு அரசு சமூக நீதி நாளாக கொண்டாடுகிறது. பிரதமர் மோடிக்கும் அன்றே பிறந்தநாள். இப்படிப்பட்ட நிலையில் பெரியார் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதை சிறப்பு நாளாக.. அதுவும் சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் இது குறித்து உறுதிமொழி எடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாஜக ஏன்?
மோடி பிறந்த நாள் இருக்கும் அதே நாளில் தமிழ்நாடு அரசு பெரியார் தினத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும்.. இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை பாஜக திடீரென ஆதரித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தனது கொள்கைகளில் புதிய பாதையை கடைபிடிக்கிறதா, பெருவாரியான மக்களின் கொள்கைகளுடன் பிணைந்து போக நினைக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. அதுவும் பாஜகவின் டாப் தலைகளே இப்படி இந்த சமூக நீதி திட்டங்களை வரவேற்று இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவின் இந்த புது "சாப்ட் அரசியல்" அவர்களுக்கு கை கொடுக்குமா என்பது போக போகத்தான் தெரியும்!












Click it and Unblock the Notifications