இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: சென்னை தூர்தர்ஷனில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்? என கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பொதிகை எனும் பெயரை நீக்கியிருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கத்தைதான் பொதிகை தூர்தர்ஷன் மூலம் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம்.
அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மாதம் கொண்டாட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய அரசு செய்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் முன்பு திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications