தலைத்தூக்கவே விடக்கூடாது.. பாஜகவிற்கு எதிராக அடித்து தூக்கிய அதிமுக "தலை".. உடைந்து சிதறும் திட்டம்
சென்னை: சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை பேசிய அதிமுக சீனியர்களில் ஒருவர் பேசியது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. நாளையும் அவையில் காரசாரம் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சட்டசபையில் அதிமுக உட்கட்சி விவகாரம் பெரிதாக வெடித்தது. முக்கியமாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததால் அதிமுகவின் இரண்டு கோஷ்டிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது அவையில் அதிமுக பாஜக இடையிலான மோதலும் கொஞ்சம் வெளியே தெரிந்தது. அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.

சட்டசபை
இந்த நிலையில்தான் இரண்டு தரப்பு மோதல் சட்டசபையிலும் நேற்று முதல்நாள் லேசாக தலை காட்டியது. சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை பேசிய அதிமுக சீனியர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சில்பல பாயிண்டுகளை வைத்து பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ''நான் உணர்வோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறுமாதிரி போனால் பிரயோஜனமில்லை. ஒரு கட்டம் வரையில்தான் உங்களோடு நாங்க வரமுடியும். ஒரு கட்டத்துக்கு மேலே உங்களை எதிர்த்தே ஆகணும். எதிர்த்தால்தான் நீங்க (திமுக ஆளும் கட்சி) அந்த பக்கம் இருக்க முடியும். நாங்க இந்த பக்கம் ( அதிமுக-எதிர்கட்சி ) இருக்க முடியும்.

வருவீர்களா ?
மறுபடியும் நாங்க அந்த பக்கம் வரணும்னா, நீங்க இந்த பக்கம் வரணும்னா நமக்கு நாமே அடிச்சிக்கிட்டு இருக்கணும்'' என்று பேசியிருந்தார். கே.பி.முனுசாமி அப்படிப் பேசியதற்கு சில காரணங்கள் இருப்பதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. நம்மிடம் பேசிய அவர்கள், ''தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக திமுக இருக்க வேண்டும் ; அல்லது அதிமுக இருக்க வேண்டும். இதைத்தாண்டி எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்கிற அளவுக்கு வளர்ந்து விடக்கூடாது. குறிப்பாக, பாஜகவை தலைத்தூக்கவே விடக்கூடாது. எந்த தேர்தலாக இருந்தாலும் அதிகபட்சம் 2 சதவீத வாக்குகளிலேயே அந்த கட்சியை முடக்கி விட வேண்டும். நாம் பங்காளிகள் (திமுக-அதிமுக).

கருத்து வேறுபாடு
நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வரலாம்; அடித்துக் கொள்ளலாம்; சமாதானமாகலாம். ஆனால், நியாயம் சொல்றேன்னு யாரும் நாட்டாமை பண்ண நுழைய அனுமதிக்க கூடாது என்கிற கருத்தினை வலியுறுத்தவே கே.பி.முனுசாமி பேசினார். முழுமையாக பேசுவதற்கு அனுமதிக்காமல் சபாநாயகர் தடுத்து விட்டதால், முழுமையாக பேச அவரால் முடியவில்லை'' என்று தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடத்தை பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது.

உட்கட்சி மோதல்
அதிமுகவில் உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் அதிமுகவை வீழ்த்திவிட்டு அந்த இடத்தை பிடிக்க பாஜக முயன்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவை சீண்டும் விதமாக கேபி முனுசாமி அப்படி பேசியதாக தெரிவிக்கின்றனர் அதிமுக தரப்பினர். தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடவும், தன்னை பிரதான எதிர்க்கட்சியாக நிறுத்தவும் பாஜக நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் பிளான்களை அடித்து நொறுக்கும் விதமாக கேபி முனுசாமி காட்டமாக பேசி இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications