ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விசிகவில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ஆளூர் ஷா நவாஸ்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் பின்னணி குறித்து விசிகவின் இளைஞரணி செயலாளர் சங்க தமிழன் 'ஒன் இந்தியா' தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஆளூர் ஷாநவாஸ் அயோக்கியத்தனம் செய்ததாக காட்டமாக விமர்சனம் செய்துள்ளதோடு, தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. விசிகவிற்கு மொத்தம் 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் நாகை விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு மீண்டும் போட்டியிட திருமாவளவன் சீட் கொடுக்கவில்லை. இதுபற்றி விசிகவின் இளைஞரணி செயலாளர் சங்க தமிழன் 'ஒன் இந்தியா' தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சிறிய வயதிலேயே பெரிய பதவிகள்
விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் தான் திமுகவே வெற்றி பெறும் என்பது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆளூர் ஷாநவாஸ்க்கு சிறிய வயதிலேயே பெரிய பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் புரிதல் இன்றி பேசலாம். இப்போது அவருக்கு விசிகவில் சீட் கொடுக்கப்படவில்லை. விசிகவில் இஸ்லாமியர் யாருக்குமே சீட் கொடுக்காவிட்டால் அவர் பேசுவதில் அர்த்தம் உள்ளது.
இன்னொரு இஸ்லாமியருக்கு சீட்
ஷா நவாஸ்க்கு சீட் கொடுக்கும்போதே அப்துல் ரஹ்மான் (பண்ருட்டி விசிக வேட்பாளர்) போட்டியிட வாய்ப்பு கேட்டார். நான் எப்படி விசிகவில் இளைஞரணி செயலாளராக இருக்கிறேனோ, அதேபோல் இஸ்லாமிய அணிக்கு செயலாளராக இருப்பவர் தான் அப்துல் ரஹ்மான். இப்போது அவருக்கு தான் சீட் கொடுத்துள்ளோம்.
பேசாத ஷாநவாஸ்
ஷா நவாஸ் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் விசிகவிற்கு 10 சீட் கொடுங்கள். 12 சீட் கொடுங்கள் என்று அவர் பேசியிருக்கிறாரா?. பேசக்கூட வேண்டாம். ஸ்டாலினிடமே பேசி 10 சீட் வாங்கி வந்திருந்தால் அப்துல் ரஹ்மானுக்கு ஒரு சீட் என்று திருமாவளவன் கொடுத்தாலும், இன்னொரு சீட்டை அவர் எடுத்து இருக்கலாம்.
இதுபற்றி எல்லாம் பேசமாட்டார். ஆனால் கட்சி தலைவர் பேசி சீட் வாங்கி வந்தால் எனக்கு கொடுக்கவில்லை என்று பேசுகிறார். இது அநாகரீக பேச்சு. அவர் தலித் மக்களுக்காக அவர் என்ன பேசினார்? பொதுமக்களுக்காக என்ன பேசினார்? வேங்கைவயல் பிரச்சனைக்கு குரல் கொடுத்தாரா? தலித் விடுதலைக்காக மட்டுமில்லை. இஸ்லாமிய விடுதலைக்காக பேசினாரா? அவர் எதற்காகவும் பேசவில்லை.
அயோக்கியத்தனம்
அறம் சார்ந்து பேச வேண்டும். நாகப்பட்டினம் தொகுதி வேண்டாம் என்று திமுகவிடம் ஷா நவாஸ் கூறியுள்ளார். இவ்வளவு சொல்லிய நபர் ஏன் விசிகவிற்கு 10 சீட் வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. நாகப்பட்டினத்துக்கு பதில் ராயபுரம், பல்லாவரம் கேட்டார். அதனை திமுக கொடுக்கவில்லை. அவர் (ஆளூர் ஷா நவாஸ்) செய்தது எல்லாம் அயோக்கியத்தனம்'' என காட்டமாக கூறினார். இதுபற்றி கூடுதல் விவரங்கள் கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications