ஓ அவருக்காகத்தான் கடலூர் தொகுதியை காங்கிரஸ் கேட்டு பெற்றதா? அப்போ வெற்றி கன்ஃபார்ம்?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை, கடலூர், நெல்லை ஆகிய தொகுதிகளில் இந்த முறை புதிதாக போட்டியிடுகிறது. அதிலும் கடலூர் மக்களவை தொகுதியை ஏன் காங்கிரஸ் கேட்டு பெற்றது தெரியுமா?
ஆரணி தொகுதியை திமுகவுக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக கடலூர் தொகுதியை காங்கிரஸ் கேட்டு வாங்கியுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது.
இன்னமும் அதிமுக, பாஜக உள்ளிட்டவை கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்யவில்லை. அது போல் பாமக, தேமுதிகவும் எந்த கூட்டணியில் இடம் பெறுகிறார்கள் என்பது குறித்து எந்த விதமான தகவலையும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியானது.
அதில்
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
சிவகங்கை
விருதுநகர்
கரூர்
கடலூர்
நெல்லை
மயிலாடுதுறை
கன்னியாகுமரி
புதுவை
ஆகிய தொகுதிகள் ஆகும். கடந்த முறையும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 3 தொகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளது. அதாவது ஆரணி, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளை திமுகவுக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக கடலூர், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதிலும் கடலூரை காங்கிரஸ் கேட்டு பெறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2016ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு வரை சு. திருநாவுக்கரசர் இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரது இடத்திற்கு கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.
இதனால் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனக்கு திருச்சி தொகுதியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைமையிடம் கேட்டார். அதன்படி அவருக்கு அவர் கேட்ட தொகுதியே கொடுக்கப்பட்டது. அவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பதிலாக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டார். திருநாவுக்கரசரை போல் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் தலைமைக்கு ஒரு விண்ணப்பம் வைத்திருந்தார்.
அதன்படி தனக்கு 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதியை வழங்குமாறு கே.எஸ்.அழகிரி கேட்டிருக்கலாம். அந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே தமிழக காங்கிரஸ் தலைமையும் அந்த தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டு பெற்றிருக்கலாம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications