"சீரழிச்சாச்சு".. பாஜகவை புட்டு புட்டு வைத்த "காம்ரேடு".. வரிந்து கட்டிய திருப்பதி நாராயணன்.. ஏன்?
சிபிஎம் சீதாராம் யெச்சூரிக்கு, தமிழக பாஜக காட்டமான பதிலடியை தந்துள்ளது
சென்னை: பாஜகவை கடுமையாக சாடிய, சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரிக்கு, தமிழக பாஜக காட்டமான பதிலடியை தந்துள்ளது..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருபவர்.. வெளிநாட்டில் காந்தி, இந்தியாவில் கோட்சே என்பது தான் பாஜக அரசின் கொள்கை என்று ஒருமுறை வெளிப்படையாகவே விமர்சித்தவர்..
ஒருபுறம் நம் நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று அனைவருக்கும் சொல்ல விரும்பும் இவர்களே, மறுபுறம் நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறார்கள் என்றும் ஓபனாகவே சொன்னவர்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் பாஜக நுழைவது பெரும் ஆபத்து என்பதையும் அடிக்கடி எச்சரித்து வருபவர்..
எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் நிலவும் வேலையின்மை குறித்து கவலைப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருவார்.. மத்திய அரசு தன்னுடைய பொது செலவினத்தையும், முதலீட்டையும் அதிகரிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தில் உயர்த்தவோ, வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ முடியாது, ஆனால், இது தொடர்பான நடவடிக்கைகள் எதையும் அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்..
நேற்றைய தினம்கூட, "கடந்த 7 வருடங்களில் வேலைக்காக விண்ணப்பித்தோர் 22.05 கோடி.. ஆனால், வேலை கிடைத்ததோ 7.2 லட்சம் பேருக்குதான்.. இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை அழித்து கொண்டிருக்கும் திறமையற்ற மோடி அரசாங்கம்" என்று புள்ளிவிவரங்களை குறிப்பிட்டிருந்தார்.

நாராயணன் திருப்பதி
இதற்கு தமிழக பாஜக பதிலளித்துள்ளது.. மாநில பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, நீண்ட விளக்கம் ஒன்றை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிவித்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "பொதுவுடைமை கட்சிகளுக்கு பொது அறிவு இருக்காது என்று சொல்வார்கள்.. அதை நிரூபித்து விட்டார் சீதாராம் யெச்சூரி... இங்கு இவர் குறிப்பிட்டிருக்கும் 22.05 கோடி 'விண்ணப்பித்தோர்' அல்ல. 'விண்ணப்பங்கள்'. (அவருடைய இணைப்பிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளது). 'மத்திய அரசு வேலை' குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு துறை அமைச்சரின் பதில் மிக தெளிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது...

மன்னிப்பு
மத்திய அரசில் 93 துறைகள் உள்ளன. ஒரே நபர் பல துறைகளில் பலமுறை விண்ணப்பித்திருக்கலாம். ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் பல முறை, பல துறைகளில் விண்ணப்பிக்கும் நிலையில், 22 கோடி விண்ணப்பங்கள் என்பது ஒரு பெரிய எண்ணிக்கை அல்ல. மேலும், வேலை இல்லாதோர் தான் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதில்லை. விண்ணப்பிப்போர்களில் பெரும்பாலோனோர் வேறு ஏதாவது ஒரு பணியில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதிக சம்பளம், கூடுதல் வசதி வாய்ப்புகள் ஆகிய காரணங்களுக்காக மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்திருக்கலாம்.

மாயை
ஆனால், 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது மக்களை முட்டாள்களாக கருதி ஏமாற்ற எண்ணும் மோசடி வேலை. ஒரு அரசு வேலை வாய்ப்பை பெருக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை,.. ஆனால், மத்திய அரசு பணியில் அனைவர்க்கும் வேலை கொடுக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற வாதம் மக்களோடும், பொருளாதாரத்தோடும் தொடர்பின்றி காணாமல் போய் விட்டனர் கம்யூனிஸ்டுகள் என்பதை உணர்த்துகிறது.

கண்கூடு
இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140கோடி.இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் சுய தொழில் புரிவோர் உட்பட 55 கோடி பேர் வருமானமீட்டும் பணியாற்றுகின்றனர். சராசரியாக ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் வருமானம் ஈட்டும் வேலை வாய்ப்புகள் உரிய அளவில் உள்ளன என்பது கண்கூடு. 15 வயத்துக்குட்பட்டவர்கள் 40 கோடி பேர் உள்ள நிலையில் சுமார் 15 கோடி பேர் 18-23 வயதுக்குள் உள்ளனர். சுமார் 50கோடி பெண்களில் 8 கோடி பேர் பணியாற்றுகின்றனர்.

அப்ளிகேஷன்
அதாவது 45 கோடிக்கும் அதிகமான ஆண்கள் பணியாற்றுகின்றனர். 40 கோடிக்கும் அதிகமானோர் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை கொரோனா பேரிடரின் போது இதே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து குறிப்பிட்டனர்.. சீதாராம் யெச்சூரி அவர்களின் இந்த அறிக்கை தவறானது என்பதோடு, அரசு குறித்தும், நாடு குறித்தும் மக்களிடையே தவறான எண்ணத்தை விதைக்கும் உள்நோக்கம் கொண்டது. ஆகவே, 'விண்ணப்பங்கள்' என்பதை 'நபர்கள்' என்று குறிப்பிட்டு பலமான இந்தியாவை பலவீனமான நாடாக சித்தரித்ததற்கு நாட்டு மக்களிடையே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார் நாராயணன்.












Click it and Unblock the Notifications