திமுகவுடன் "ஓரையில்" ஒருங்கிணைந்த தேமுதிக! இன்றுனு பார்த்து அறிவாலயத்திற்கு பிரேமலதா சென்றது ஏன்?
சென்னை: யாருடன் கூட்டணி என்று அறிவிப்பதில் கடந்த 2 மாதங்களாக போக்கு காட்டி வந்த தேமுதிக, இன்றைய தினம் இந்த நேரத்தில் திமுகவுடன் கூட்டணி என்பதை அறிவித்தது ஏன் தெரியுமா? அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா கால் வைத்த நேரம், வாயிலிருந்து வந்த அந்த வார்த்தை எல்லாமே சுபமாக அமைந்துவிட்டது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான எம்.கே. ஸ்டாலினை சந்தித்து இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "முதல்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இது கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் நடந்துள்ளது. 2016-இல் இந்த கூட்டணி அமைய வேண்டியது தாமதமானது, 10 ஆண்டுகள் கழித்து இப்போது நிறைவேறியுள்ளது" என்று தெரிவித்தார்.
முதல்வர் பூரிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்: "'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டணி மக்கள் நலன், நல்லாட்சி மற்றும் நிலைத்த முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்."
அதிமுக கூட்டணி
தேமுதிக கட்சி கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்போது திமுகவுடன் இணைவதன் மூலம், விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை திமுக கூட்டணி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளும் குழு அமைத்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா கூறினார். இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணி
இது திமுக கூட்டணிக்கு பெரும் பலமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முன்னதாக 2016 மற்றும் 2019-இல் திமுகவுடன் கூட்டணி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்த கேள்வி
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எங்கு சென்றாலும் அவரிடம் செய்தியாளர்கள் கேட்கும் ஒரே கேள்வி, "தேமுதிக யாருடன் கூட்டணி" என்பதுதான். அதற்கு அவர் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நாளுக்கு முந்தைய நாள் அறிவிப்பேன் என்றாராம். அப்படியென்றால் கடந்த 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாக இருந்தது.
அதற்கு முன் நாள் 16ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 23 ஆம் தேதிக்கு தள்ளி போனது. இதனால் பிரேமலதா 22 ஆம் தேதி அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
திடீர் ட்விஸ்ட்
ஆனால் இன்று யாரும் எதிர்பாராத நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக அறிவாலயத்திற்கு பிரேமலதா சென்றது ஏன் என்பதை பார்க்கலாம். இன்றைய தினம் வளர்பிறை மூன்றாம் நாள், நல்ல நாள்! அதிலும் பிரேமலதா அறிவாலயத்தில் கால் வைத்த நேரம் 10.30 மணி!
அதாவது 10- 11 வரை புதன் ஓரை. இது சுப ஓரை! இந்த ஓரையில் கல்வி, படிப்பு, தொடர்பான காரியங்களை இந்த ஓரையில் செய்யலாம். வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங்களிலும் ஈடுபடலாம். திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம். பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் வெற்றியை தரும் ஓரை புதன் ஆகும்.
அறிவாலயத்திற்கு சென்ற பிரேமலதா
பிரேமலதாவும் இரு முறை பழம் நழுவில் பாலில் விழுந்தது, பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது என கூறிவிட்டார். அவர் தெய்வ பக்தி கொண்டவர். இது போல் ஓரை, நாள் நட்சத்திரம் பார்ப்பதில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் இன்றைய தினம் அறிவாலயத்திற்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications