"டங்க் ஸ்லிப்" தானா? ஆஹா ஏழுமலைன்னு இபிஎஸ் சொன்னதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கோ? அப்போ அண்ணாமலை?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை சமீபத்தில் பேட்டி ஒன்றில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறாக குறிப்பிட்டார். பாஜக - அதிமுக இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இப்படி பெயரை மாற்றி குறிப்பிட்டது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பாஜக உறவில் தற்போது லேசான பிளவு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக இரட்டை தலைமையை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்ததால் இரண்டு கட்சிகளின் கூட்டணி முறிந்தது.
Recommended Video
ஆனால் இவர்கள் மீண்டும் 2024ல் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி சென்னை வந்த போது அதிமுக - பாஜக தலைகள் சந்தித்து நட்பாக பேசிக்கொண்டனர்.

மோதல்
வெளியில் இப்படி இவர் ராசியாக இருந்தாலும் உள்ளே பாஜக மீது அதிமுக கொஞ்சம் கடுப்பில்தான் இருக்கிறதாம். முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்டிக்கொள்வதை அதிமுக சுத்தமாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது எதிர்க்கட்சி போல காட்டிக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் அதிக இடங்களை (25+ இடங்களை) கேட்கும் திட்டத்தில் பாஜக இருக்கிறதாம். இதை அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை
அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை எதிர்கட்சித் தலைவர் போல காட்டிக்கொண்டே அடிக்கடி பேட்டிகளை கொடுப்பதையும், அதிமுக விரும்பவில்லை என்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாகவே நேற்று அதிமுக ஐடி விங் மாநாட்டில் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசுகையில்.. பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். அதில்., தமிழ்நாட்டில் நாம்தான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும்.

பாஜக எதிர்கட்சி
இதற்கு ஐடி விங் இணையத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பாஜகவை விட அதிமுக தனியாக எதிர்கட்சியாக தெரியும் என்று பொன்னையன் கூறி இருக்கிறாராம். இதுதான் தற்போது அதிமுக பாஜக இடையே மோதலை இன்னும் அதிகமாக்கி உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கத்தான் நேற்று பேட்டி ஒன்றில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்வதற்கு பதிலாக, பாஜக தலைவர் ஏழுமலை என்று தவறி சொன்னார். அதாவது நேற்று பொன்னையன் பாஜகவிற்கு எதிராக பேசிய அதே நாளில் எடப்பாடி " ஏழுமலை" என்று மாற்றி பேசி இருக்கிறார்.

என்ன அர்த்தம்?
எடப்பாடி இப்படி சொன்ன உடனே அருகில் இருந்த எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை திருத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி இப்படி திடீரென பெயரை மாற்றி சொன்னது "விபத்தாக " இருக்காது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதாவது அண்ணாமலை பெயரை தெரியாமல் எல்லாம் மாற்றி சொல்லி இருக்க மாட்டார் எடப்பாடி. அண்ணாமலையை நாங்கள் பெரிய பொருட்டாக கருதவில்லை.. பாருங்க அவர் பெயர் கூட நியாபகம் இல்லை என்று குறிப்பாக உணர்த்தும் விதமாக எடப்பாடி இப்படி பேசி இருக்கலாம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

அதிமுக விரும்பவில்லை
அண்ணாமலை தன்னை எதிர்கட்சித் தலைவர் போல காட்டிக்கொள்கிறார். அதிமுகவில் இதை சீனியர்கள் யாரும் விரும்பவில்லை. முக்கியமாக எடப்பாடி கேம்பில் இருப்பவர்கள் யாரும் விரும்பவில்லை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலையை நாங்கள் பெரிதாக கருதவில்லை என்று உணர்த்தும் விதமாக அவரின் பெயர் கூட நியாபகம் இல்லாதது போல எடப்பாடி பேசி இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர். அது வெறும் டங்க் ஸ்லிப்பாக இருக்க வாய்ப்பு இல்லையாம்!

பாஜக தரப்பு
ஆனால் பாஜக தரப்போ இப்போதைக்கு மொத்தமாக அதிமுகவை பகைக்காது என்றே கூறப்படுகிறது. 2024 வரை முடிந்த அளவு பாஜக தனியாக வளர பார்க்கும். பெரிய அளவில் கட்சி கட்டமைப்பை வளர்க்க முடியவில்லை என்றால், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்ற திட்டத்திலேயே பாஜக இருக்கிறதாம்... இருந்தாலும் கூட்டணியில் நாங்கள்தான் பாஸ் என்பதை உணர்த்தவே இப்படி அதிமுக முரண்டு பிடிக்க தொடங்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications