சரிப்பட்டு வராது! உதயநிதி பதவி ஏற்பு விழாவை.. எட்டிக்கூட பார்க்காத எடப்பாடி! அழைப்பை நிராகரித்தது ஏன்
சென்னை: நேற்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அமைச்சராக பொறுப்பேற்ற நிகழ்விற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அவரின் இந்த முடிவு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

அழைப்பு
ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கில், நேற்று சரியாக காலை 9.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இதில் கடவுளின் பெயரில் பதவி ஏற்பேன் என்று சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின் ரகசிய காப்பு பிரமாணத்தில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டார். இந்த நிகழ்விற்கு பல்வேறு நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

யார் சென்றனர்?
ராஜ்பவனில் நடந்த இந்த விழாவில் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட 500 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். சட்டசபை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்விற்கு செல்லவில்லை. அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை செய்யும் போது எதிர்கட்சித் தலைவரையும் நிகழ்விற்கு அழைப்பது வழக்கம். அதனால் இவருக்கு அந்த அழைப்பு சென்றது. ஆனால் எடப்பாடி இந்த நிகழ்விற்கு ஏனோ வரவில்லை. திமுக அதிமுக இடையே கடும் மோதல் உள்ளது,.

புறக்கணிப்பு
பல்வேறு வழக்குகள் காரணமாக எடப்பாடி - ஸ்டாலின் இடையிலும் கடுமையான மோதல்கள் உள்ளன. அரசியல் ரீதியாக இவர்கள் எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறார்கள். ஆனாலும் உதயநிதி பதவி ஏற்பு விழாவிற்கு எடப்பாடி அழைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தலைவர்களுக்கும் 3ம் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன் அதிமுக பதவி ஏற்பின் போது ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன் வரிசையில் அதிமுகவிற்கு திமுக தரப்பு இடம் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பிற்கு எடப்பாடி அழைக்கப்பட்டும் செல்லவில்லை.

விவாதம்
இந்த நிகழ்விற்கு அதிமுகவில் இருந்து எடப்பாடி மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார். மற்ற அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு செல்லவில்லை. இந்த நிலையில் எடப்பாடி மட்டும் தனியாக செல்வது சரியாக இருக்காது. இப்படி செல்வது சரிப்பட்டு வராது என்று எடப்பாடி இந்த நிகழ்வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதோடு அதிமுக உட்கட்சி மோதல் நிலவும் நேரத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தால், அதிமுக தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் திரும்பும் வாய்ப்பு உள்ளதாலும் எடப்பாடி "ஸ்டிரிக்ட்" நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முதல்நாள் சேலத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி, குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை தலைமைக்கு கொண்டு வர முன்னோட்டம் பார்க்கிறார்கள். அவர் அமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா?. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு சென்றதா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications