21 இல் பைபாஸ் ஆபரேஷன்! 3 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தாத அமலாக்கத் துறை.. என்ன பிளான்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 21 ஆம் தேதி பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்துள்ளனர்.
இதன் முடிவுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலை முழு தகுதியுடன் இருக்கிறதா என்பது தெரியும். இதையடுத்து வரும 21 ஆம் தேதி அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து நாளையும் நாளை மறுநாளும் இதய ஆபரேஷனுக்கு தேவையான இறுதிகட்ட உடல் பரிசோதனைகளை செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சில நாட்கள் வரையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும். அது போல் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜியிடம் உடனே விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறையினர் நேற்று அவரிடம் முதல் நாள் விசாரணையை தொடங்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய தினம் அமலாக்கத்துறையினர் காவேரி மருத்துவமனைக்கு வரவே இல்லை என தெரிகிறது. கடந்த 16ஆம் தேதி மாலை செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரணைக்கு அனுமதி கிடைக்கப்பட்டது. இதன் மூலம் செந்தில் பாலாஜி இன்று 3ஆவது நாள் காவலில் இருந்து வருகிறார்.
வரும் 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தால் அடுத்த 2 நாட்களில் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்துவிடும். இதனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் விசாரிக்காமல் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது செந்தில் பாலாஜியிடம் மருத்துவமனையில் விசாரிக்க நீதிமன்றம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது.
எனவே செந்தில் பாலாஜியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 8 நாட்களில விசாரிக்க முடியவில்லை என கூறி மேலும் காவலை நீட்டிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. எனவே அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரை காவலில் எடுப்பதா என்பது குறித்தும் அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாகவும் டெல்லி அதிகாரிகளிடம் சென்னை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications