தொடர்ந்து உயரும் தங்க விலை! வேகமாக அதிகரிப்பது ஏன்? 2 மேஜர் காரணம் இதுதான்! இனி குறைவது எப்போது?
சென்னை: தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை சென்னையில் கடந்த 5 நாட்களாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த தொடர் விலை உயர்வின் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளதோடு இனி எப்போது தங்கம் விலை குறையும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தங்கம்.. நம் நாட்டில் தினமும் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் உள்பட பல்வேறு காரணிகளை பொறுத்து தங்கத்தின் விலை என்பது நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது.

ஆனாலும் அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு தங்கத்தின் விலை மீண்டும் சரிய தொடங்கியது.
கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் வரை தங்கம் குறைந்தது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.57,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து தங்கம் விலை சரிந்து ரூ.55,000 வரை குறைந்தது. நவம்பர் 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்து ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்பட்டது.அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை எகிற தொடங்கியது.நவம்பர் 15ல் சென்னையில் ஒரு சவரன் ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,560 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,945 க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 18ல் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ 55,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,995 க்கு விற்பனையானது. நவம்பர் 19ல் ஒரு சவரன் தங்கத்துக்கு ரூ 560 உயர்ந்து ரூ 56,520 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,065 க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 20ல் சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ரூ 56,920 க்கும், கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,115 க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57,160 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ 30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,145 க்கு விற்பனையானது. இன்று (நவம்பர் 22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,225 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்தது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. போர் நடவடிக்கையை தொடங்கி உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதேபோல் ரஷ்யா மீது தங்களின் ஏவுகணையை வைத்து தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது. உக்ரைனும் அமெரிக்காவின் ஏவுகணையை வைத்து ரஷ்யாவை தாக்கி உள்ளது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுக்கிறது. இதனால் இஸ்ரேல் - காசா போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாகி உள்ளது.
பொதுவாக இருநாடுகள் இடையேயான மோதல், போர் உள்ளிட்ட காரணங்களின்போது சர்வதேச அளவில் பெரிய பெரிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான துறையில் முதலீடு செய்வார். அந்த வகையில் தான் தற்போது முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் தங்கத்தை நோக்கி முதலீடு செய்கின்றனர். கடந்த சில நாட்களாக இந்த முதலீடு என்பது அதிகரித்து வருவதாக இயல்பாக தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உயர தொடங்கி உள்ளது.
ஏனென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு விலை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் போர் நடவடிக்கையை நிறுத்துவதாக கூறியிருந்தது தான். ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் ரஷ்யா மீது தங்களின் ராணுவ தளவாடங்களை வைத்து தாக்குதல் நடத்த அனுமதி வழங்கி உள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் கூட தனது நாட்டின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையில் இருந்து பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்த 2 காரணங்களும் தான் தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த தங்கத்தின் விலை இனி குறைய வேண்டும் என்றால் இஸ்ரேல் - காசா பேர், இஸ்ரேலுக்கும் லெபனான், ஈரான் இடையேயான மோதல் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்டவற்றில் பதற்றம் குறைய வேண்டும். அப்போது தான் தங்கத்தின் விலை இனி குறையும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications