தன்னிச்சையான முடிவு.. அதிர்ந்த டெல்லி.. ஆளுநர் ரவி தனது முடிவை திரும்ப பெற்றது ஏன்? உண்மையான காரணம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கும் முடிவை ஆளுநர் ஆர். என் ரவி நிறுத்தி வைத்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் பரபரப்பிற்கு இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியாக நடக்காது.

அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
பின்வாங்கினார்: இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.
தேசிய அளவில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .

அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான 7 காரணங்கள் உள்ளதாம். காரணம் 1 - இந்த முடிவு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லியை ஆலோசிக்காமல் எடுத்த முடிவு. அவர் - அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருங்கிய வட்டத்தினர் மூலம் எடுக்கப்பட்ட முடிவு.
காரணம் 2 - இந்த முடிவை மத்திய உள்துறை விரும்பவில்லை. காரணம்.. ஆளுநர் முடிவால் தேசிய அளவில் சட்ட ரீதியான சிக்கல்கள் வரும். தேசிய அளவில் ஆளுநருக்கு எதிராக மக்களே குரல் கொடுக்கும் நிலை வரும்.
காரணம் 3 - ஆளுநர் அமைச்சரவை நீக்க முடியும் என்றால், அவரால் முதல்வரையும் நீக்க முடியும். வழக்கு உள்ள எல்லோரையும் நீக்க முடியும் என்றும் பொருள்படும். அப்படி நடந்தால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எதற்கு என்ற கேள்வி வரும். இது அரசியலமைப்பு ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தும்.
காரணம் 4- ஏற்கனவே பல வழக்குகளில்.. ஆளுநர்களுக்கு எதிராக உயர், உச்ச நீதிமன்றம் இதில் கண்டிப்பான கருத்தை கூறி உள்ளது. அமைச்சரவையை தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லவே இல்லை என்று அறிவித்துள்ளது.

காரணம் 5 - முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் என்றும், பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தைப் பற்றி பேசக்கூடாது என்றும் பிரிவு 164 கூறுகிறது. அதை ஆளுநர் மீற முடியாது.
காரணம் 6 - அடிப்படை சட்டத்தை ஆளுநர் மீறிவிட்டதால் அவரின் பதவிக்கே கூட சிக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளன. இதை காரணமாக காட்டி அவரை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம், அல்லது குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முயற்சி செய்யும்.
காரணம் 7 - நேற்று இந்த விவகாரத்தால் டெல்லி நேரடியாக ஆளுநரை தொடர்பு கொண்டு.. உங்கள் முடிவை நிறுத்தி வையுங்கள் என்றும் அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications