அம்மா.. அம்மானு அழுதாரே! 20 வருட அதிமுக விசுவாசி.. திடீரென திமுகவில் சேர்ந்த "மீசை".. இதான் காரணம்!
சென்னை: அதிமுகவில் நீண்ட கால தொண்டராக இருந்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மீசை சௌந்தரராஜன் திடீரென திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்.
Recommended Video
நேற்று அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணைத் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்
நடிகர் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும்.. விழா நடக்கும் இடத்தில் இருந்த தொண்டர் ஒருவர் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார்.
மீசை சௌந்தரராஜன்
ரஜினி, சத்யராஜ் எல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த தொண்டரை பார்த்ததும் செய்தியாளர்கள் பலர் சென்று அவருடன் போட்டோ எடுக்க தொடங்கினர். மிகப்பெரிய மீசை வைத்து கொண்டு கம்பீரமாக நின்ற அந்த தொண்டர் யாரும் இல்லை .. சாட்சாத் மீசை சௌந்தரராஜன்தான். போட்டோவை பார்த்தால்.. இவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறது என்று தோன்றுகிறதா? அவரே தாங்க.. அதிமுகவில் கவனம் பெற்ற தொண்டராக இருந்த மீசை சௌந்தரராஜன்தான் தற்போது திமுகவில் சேர்ந்து உள்ளார்.
திமுக மீசை சௌந்தரராஜன்
அதிமுகவில் என்ன விழா நடந்தாலும்.. என்ன கூட்டம் நடந்தாலும் முதல் ஆளாக விழா மேடைக்கு வெளியே நிற்பது மீசை சௌந்தரராஜன்தான். பூசணிக்காய் உடைப்பது தொடங்கி தேங்காய் உடைப்பது வரை பல விஷயங்களில் கம்பீர மீசையை முறிக்கொண்டு இவர் காட்சி அளிப்பார். அதிமுக கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் அம்மா வாழ்க கோஷம் போட்டது மீசை சௌந்தரராஜன்தான்.
அம்மா வாழ்க்கையா
அதிலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தினமும் அப்போலோ வாசலில் வந்து அம்மா.. அம்மா என்று கண்ணீர்விட்டு, தேங்காய் உடைத்ததை வழக்கமாக வைத்து இருந்தார். அதற்கு முன் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது சட்டையை கழற்றிவிட்டு பனியனோடு இவர் கண்ணீர்விட்ட காட்சிகள் எல்லாம் வைரல். ஜெயலலிதாவிற்காக அப்போதும் இவர் சிறப்பு பூஜைகளை செய்தார். வெள்ளை டிரான்ஸ்பிரன்ட் சட்டையில் இவர் ஜெயலலிதா புகைப்படத்தோடு வலம் வந்தார்.
தொண்டர்
கட்சியில் பெரிய பதவியில் இல்லை என்றாலும் தொண்டனாக திருப்தி பட்டுக்கொண்டார். கட்சியின் மூத்த தலைகளும் அவ்வப்போது இவரை பார்த்து வணக்கம் வைப்பது உண்டு. ஆனால் ஜெயலலிதா மறைவு, அதிமுக தோல்வி, இரட்டை தலைமை மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் மீசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களாக அதிமுக மீது அதிருப்தியில் இருந்துள்ளார். கட்சியின் கூட்டங்களுக்கும் தலை காட்டாமல் இருந்தார். இவர் வராமல் அதிமுக கூட்டங்களில் ஒரு "இது" குறைந்து காணப்பட்டது.
திமுக மீசை சௌந்தரராஜன்
இந்த நிலையில்தான் திடீரென நேற்று திமுக கரை வேட்டியுடன் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். மீசை சௌந்தரராஜன் கையில் இருந்த போனிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இருந்தது. ஜெயலலிதா இருந்த இடத்தை ஸ்டாலின் அலங்கரித்துக்கொண்டு இருந்தார். மெலிந்து காணப்பட்டவரிடம்.. என்னங்க இது என்று செய்தியாளர்கள் பக்கத்தில் போய் அவரிடம் கேட்க.. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுக-வில் என்னை இணைத்துக் கொண்டேன்.
என்ன காரணம்?
அதிமுகவில் இரட்டை தலைமையால் கட்சி பாழாகும் என்பதாலும் எனக்கு இரட்டை தலைமை பிடிக்கவில்லை. அதனால் திமுகவில் இணைந்துவிட்டேன் என்று மீசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 20 ஆண்டுகளாக கட்சியில் தொண்டனாக இருந்த மீசை சௌந்தரராஜன் அதிமுகவில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இது போன்ற தொண்டர்கள் பதவியை விரும்ப மாட்டார்கள். விசுவாசம் காரணமாக கட்சியில் இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட தொண்டர்களே அதிமுகவில் இருந்து வெளியேறுவது அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.