‛கொசுவர்த்தி சுருள்’ பதிவிட்டது ஏன்? உதயநிதி கொடுத்த ரியாக்சன் இதுதான்! மீண்டும் கிளம்பிய விவாதம்
சென்னை: சனாதனம் குறித்த பேச்சால் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் எரியும் கொசுவர்த்தி சுருளை மட்டுமே பதிவிட்டார். இதன் பின்னணி குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் என்பது இன்னும் விவாதத்தை சூடாக்கும் வகையில் உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛டெங்கு, சிக்குன்குனியா, கொரோனாவை எதிர்ப்பதை விட ஒழிக்க தான் வேண்டும். அதுபோல் தான் சனாதனம்'' என பேசினார்.

இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜக தலைவர்கள், சாமியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் சனாதனத்தை பற்றி தவறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க திமுகவுக்கு தமிழக பாஜகவினர் பதிலடி கொடுத்தனர். அதாவது திமுகவின் ஆங்கில சுருக்கமான DMK என்பதற்கு D-Dengue, M-Malaria, K-Kosu என விளக்கம் கொடுத்து இருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே கடும் விவாதம் என்பது தொடர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு போட்டோ விவாதத்தை கிளப்பியது.
அதாவது இன்று காலை 11.53 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பச்சை நிற கொசுவர்த்தி சுருள் எரியும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை பார்த்த பலரும் குழப்பம் அடைந்தனர். திடீரென கொசுவர்த்தி சுருளை வெறுமனே உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டது ஏன்? என பலரும் சந்தேகம் கிளப்பினர்.
பாஜக மற்றும் சனாதனத்தை சீண்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இந்த பதிவு செய்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர். இதனால் இந்த பதிவு என்பது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு இந்த பதிவு தொடர்பாக விவாதம் கிளம்பி உள்ளது. அதேபோல் பாஜக ஆதரவாளர்களும் உதயநிதி ஸ்டாலினை சீண்டும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் போட்ட ஒற்றை ‛கொசுவர்த்தி சுருள்' என்பது ட்விட்டரில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இந்நிலையில் தான் இன்று பத்திரிகையாளர்கள் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்து கொண்டு ‛‛கொசுவர்த்தி சுருள்'' பதிவிட்டதன் பின்னணி அர்த்தம் பற்றி கேட்டனர். அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் கொசுவர்த்தி சுருளை பதிவிட்டுள்ளீர்கள். இது பெரிய பிரச்சனையாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த கொசுவர்த்தி சுருளை பதிவிட்டதன் அர்த்தம் என்ன?'' என கேட்டார்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டுமோ அப்படியே அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்'' என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர், ‛‛ டெங்கு, மலேரியா அழிப்பு தொடர்பானதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛இதன் பின்னணியில் பெரிய அர்த்தம் உள்ளது. தற்போது நீங்கள் எப்படி அர்த்தம் புரிந்து கொள்கிறீர்களோ? அப்படியே அதனை எடுத்து கொள்ளுங்கள்'' என கூறிவிட்டு சென்றார்.
இதன்மூலம் இறுதிவரை உதயநிதி ஸ்டாலின் ‛கொசுவர்த்தி' சுருளை ட்விட்டரில் பதிவிட்டது ஏன்? என்பது பற்றி வெளிப்படையாக எதையும் கூறவில்லை. இருப்பினும் அவரது ட்விட்டர் பதிவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அந்த பதிவை குறிப்பிட்டு, ‛‛நீ விளையாடி நண்பா'' என பதிவிட்டு உள்ளார். இதனால் இந்த பதிவு ஏன்? பின்னணி அர்த்தம் என்ன? என்பது பற்றிய தொடர்ந்து விவாதம் கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications