தவெகவில் மகன் சேர்ந்தது ஏன்? உயிர் கொடுத்த விஜய்: உருக்கமாகப் பேசிய நாசர்
சென்னை: தன் மகன் விஜய் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தது பற்றி நடிகர் நாசர் பல விசயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறார்.
கடந்த 2014 ஆண்டு சென்னை மகாபலிபுரம் அருகே காரில் தனது நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த நடிகர் நாசரின் இளைய மகன் பைசல் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையே அப்போது உலுக்கி எடுத்திருந்தது.

Image credit: Madan Gowri
அதன்பின் சிகிச்சை பெற்றுவந்த பைசல் தனது ஒட்டுமொத்தமான நினைவுகளையுமே இழந்தார். பல கட்ட சிகிச்சைகளுக்குப் பின்னர் அவருக்கு மீண்டும் நினைவு வந்தபோது பைசலுக்கு நினைவிலிருந்த ஒரே பெயர் விஜய்தான். அந்தளவுக்கு உயிராக விஜய் மீது அன்பு வைத்திருந்தார். பைசல் 10 ஆண்டுகள் கழித்து இப்போது விஜய் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளார். அந்தளவுக்கு விஜய் மீது எப்படி அன்பு வந்தது? பைசல் மீண்டு எழ எந்தளவுக்கு விஜய் உறுதுணையாக இருந்தார் என்பது பற்றி நாசர் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
நாசர் தன் மகன் பற்றிப் பேசுகையில், “நான் பரபரப்பாக நடித்து வந்த காலத்தில் என் இளைய மகன் பைசல் சிங்கப்பூர் போய் கேம் டிசைனிங் தொடர்பாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன் பின் 'சைவம்’ படத்தில் கோழி தொடர்பான காட்சிகளை உருவாக்கினார். அது முடிந்த சில நாளில் அவன் மிகப்பெரிய விபத்தில் சிக்கினான். அதில் அவனது நண்பர் கூட உயிரிழந்தார். அதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்றான் என் மகன். பல காலம் படுத்தப்படுகையாகச் சிகிச்சை பெற்றுவந்தார்.
என் மகன் விபத்தில் சினிமா துறையே என் உடன் நின்றது. கமல்ஹாசன் தான் பல மருத்துவ ஏற்பாடுகளைச் செய்தார். காவல்துறை சாந்த உதவிகளை சரத்குமார் செய்தார். என் மகன் விஜய்யின் தீவிர ரசிகன். அவனது நடை, உடை எல்லாம் விஜய் மாதிரியே இருக்கும். விபத்தின் போது 14 நாட்கள் கோமாவில் இருந்த என் மகனுக்குப் பல விசயங்கள் மறந்து போய்விட்டன. சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளித்த பின் அவன் கண்விழித்துப் பார்த்த போது அம்மா, அப்பா என யாரையும் சொல்லவில்லை. விஜய் என்ற பெயரைதான் சொன்னான்” என்ற உண்மையைப் பல ஆண்டுகள் கழித்து மதன் கவுரி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் மூலம் வெளி உலகிற்குத் தெரியப் படுத்தி இருக்கிறார் நாசர்.
இவரது மனைவி மனநலம் படித்தவர் என்பதால் மகன் விஜய்யை நினைவு வைத்திருக்கிறான் என்பதை அறிந்து அவருக்கு விஜய் படங்களைப் போட்டுக் காட்டி இருக்கிறார். அதன் மூலம்தான் பழைய நினைவுகள் திரும்பி உள்ளன. அதை அறிந்த விஜய் நாசர் மகனைப் பார்க்க விரும்பி இருக்கிறார். நேரில் வந்து பார்த்த பிறகு உற்சாகம் அடைந்துள்ளார் நாசர் மகன். ஆகவே, பலமுறை நேரில் வந்து சந்தித்துப் பேசி அவர் மனநிலை முன்னேற உதவி இருக்கிறார்.
விஜய் கட்சி தொடங்கிய செய்தியை அறிந்ததும் பைசல் தானாகவே முன்வந்து பெற்றோர்களிடம் எதைப் பற்றியும் விவாதிக்காமல் கட்சியில் உறுப்பினராகி இருக்கிறார். அந்தளவுக்கு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் விஜய் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications