சென்னை வெள்ளத்தில் களம் இறங்கிய நடிகர், நடிகையர்.. காவிரி டெல்டாவை மறந்தது ஏன்?
இதுவரை புயல் பாதித்த மக்களை நடிகர்கள் நேரில் சந்திக்காமல் உள்ளனர்.
சென்னை: "இந்த சினிமாக்காரங்க எல்லாம் என்னதான் செய்றாங்க? ஒருத்தரும் டெல்டா பக்கமே வரலேன்னா எப்படி?" என்று டெல்டாவாசிகள் குமுறி வருகிறார்கள்.
புயல் அடித்து 7 நாள் ஆக போகிறது. அரசியல்வாதிகள் தரப்பை பொறுத்தவரை மக்கள் கோபமாகத்தான் உள்ளனர். புயல் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததோடு சரி. இன்னும் சொல்லப் போனால், புயல் அடித்த அந்த ஒரே நாள் மட்டும் சுழன்று சுழன்று வேலை பார்த்தார்கள். குறிப்பாக வருவாய்த்துறை மட்டும்.
ஆனால் டெல்டா மாவட்டத்திற்கு யாருமே வரவில்லை என்று புகார் குவிந்து வருகிறது. இதன் வெளிப்பாடுதான் சாலைமறியல், கண்டனம், அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு... என தொடர்ந்து. கடைசியில் அந்த கோபம், ஆத்திரம் முதல்வர் வருகை சம்பந்தமாக இன்னமும் அதிகமாகி விட்டது. மத்திய குழு விரைவில் வரும்.. பிரதமர் நிவாரணம் அளிப்பாரென நம்புகிறேன்.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி
மன்றங்கள் உதவி
இவர்கள் இப்படி என்றால் தமிழ் சினிமா உலகம் அதற்கு மேல் உள்ளது. 7 நாள் ஆகியும் டெல்டா மக்கள் முன்னணி நட்சத்திரங்கள் யாருமே வரவில்லை என்ற புலம்பல் கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்றைக்குதான் கமல் அங்கே போய் இருக்கிறார். சிம்பு ஏதோ ஒரு நல்ல ஐடியாவை தந்திருக்கிறார். ஆனால் மற்றவர்கள் யாரும் களத்தில் நேரடியாக இறங்கவில்லை. மாறாக தங்களது மன்றங்கள் மூலமாக உதவி வருகிறார்கள்.
நிதியுதவி
கேரளாவில் வெள்ளம் வந்தபோது, பினராயி விஜயன், முடிந்தவர்கள் கேரள மக்களுக்கு உதவுங்கள் என்று ஒரே ஒரு வேண்டுகோள்தான் விடுத்தார். அதற்கு ஊருக்கு முன்னாடி நிதி உதவியை கொண்டு போய் கொடுத்தது தமிழ் சினிமா நடிகர்கள்தான். கமல், சூர்யா, கார்த்தி, விஜய் என எல்லோருமே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தந்தார்கள்.
கேரள ரசிகர்கள்
ஏன்? இவ்வளவு பெரிய தொகையை அண்டை மாநிலத்துக்கு ஏன் தர வேண்டும்? பினராயி விஜயன் கேட்டு விட்டாரே அதற்காகவா? மக்கள் அங்கே கஷ்டப்படுகிறார்களே அதற்காகவா? கிடையாது... கிடையவே கிடையாது. அங்கே இந்த நடிகர்களின் படம் ஆஹா, ஓஹோவென ஓடுகிறது. வசூலை அள்ளி குவிக்கிறது. இனியும் குவிக்க வேண்டும். நிறைய கேரள ரசிகர்கள் தமிழ் நடிகர்களுக்கு இருக்கிறார்கள். இதுதான் முக்கியமானதும் மறுக்க முடியாததுமான காரணம்.
அள்ளி தருகிறார்கள்
கமல் ரூ.25 லட்சம், விஜய் டிவி ரூ.25 லட்சம், கார்த்தி-சூர்யா ரூ.25 லட்சம் என அள்ளி தந்தார்கள். ஆனால் அம்மாநிலத்திலேயே உள்ள அம்மா நடிகர் சங்கம் எவ்வளவு தந்தார்கள் தெரியுமா? வெறும் 10 லட்சம்தான். பெரிய பெரிய முன்னணி நடிகர்கள் இருக்கும் அம்மா நடிகர் சங்கமானது, அவங்க ஊருக்கே அவங்க 10 லட்சம்தான் தந்தாங்க. ஆனால் நம் மக்கள், இதுநாள் வரை தூக்கி வளர்த்து பேரையும், புகழையும் வாழ்வை அளித்த மக்களுக்கு மனசார உதவி செய்ய தமிழ் நடிகர்கள் வராதது ஏன்?
பங்கெடுப்பு இல்லை
இதற்கு மாவட்ட மக்கள் இணையத்தில் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்களாவது பரவாயில்லை... ஒரு அறிக்கை விடுகிறார்கள், பேஸ்புக், ட்விட்டரில் கண்டனம் சொல்கிறார்கள். ஆனால் இந்த நடிகைகள் சுத்த நன்றிகெட்டவர்கள். சமூக அக்கறை சிறிதும் இல்லாதவர்கள். சினிமா உலகமே நடத்தும், ஒரு போராட்டத்துக்கு வரது கிடையாது, உண்ணாவிரததுக்கு வர்றது கிடையாது, மக்கள் பிரச்சனையில் எதுவுமே பங்கெடுத்துக்கறது கிடையாது.
ஏத்தி வெச்சோம் இல்லை
வாழ்க்கை தந்தவர்கள் இப்படி தினமும் சாப்பாடு, தண்ணி கூட இல்லாம கஷ்டப்படுவதை பார்த்தும், கேள்விப்பட்டும், கொஞ்சம் கூட மனசு என்பதே இல்லாமல் அவங்களை பத்தி கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. எல்லாம்... நம்மளை சொல்லணும். எவ்வளவு அடிப்பட்டாலும் இவங்களை தூக்கி உச்சாணி கொம்பில் ஏத்திவெச்சி அழகு பாக்கறோம் இல்லை???? நமக்கு இதெல்லாம் தேவைதான்!!