கீழ்த்தரமானது.. கண்டித்த ஹைகோர்ட் நீதிபதி.. உங்களிடமே வாதிடுகிறோம்.. மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி ஓபிஎஸ் கோரிக்கை வைத்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இதை கடுமையாக எதிர்த்தது.
இதற்கு முன் இதே நீதிபதிதான் அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். அதோடு அந்த வழக்கில் அவர் ஓபிஎஸ்ஸை விமர்சனமும் செய்து இருந்தார்.

கோரிக்கை
இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை இந்த வழக்கு விசாரணையில் இருந்து மாற்ற வேண்டும். வழக்கை வேறு அமர்விற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி பண்டாரியிடம் இதற்காக கடிதம் அனுப்பப்பட்டது. இதில் தலைமை நீதிபதி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை திங்கள் கிழமை தள்ளிவைக்கும்படி ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஏன் திங்கள்
நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

விமர்சனம்
இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டது. வழக்கு விசாரணை தொடங்கியதும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது. உங்கள் மனுதரரரை தவறாக வழிநடத்தாதீர்கள் என்றும், நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்று நேற்று நீதிபதி எச்சரித்து இருந்தார்.
Recommended Video

கீழ்த்தரமான செயல்
ஓபிஎஸ் தரப்பை நேற்று நீதிபதி கிருஷ்ணன் கடுமையாக விமர்சித்த நிலையில் இன்று மன்னிப்பு கோரப்பட்டது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்று ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் தெரிவித்தது. இதையடுத்து பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் அனுப்பிய மனுவை வாபஸ் வாங்க வேண்டும்.. 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னிடமே சொல்லி இருந்தால் நானே விசாரணையில் இருந்து விலகி இருப்பேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் தரப்பிற்கு தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிடுகிறோம் என்று ஒப்புக்கொண்டது. அதோடு இது தொடர்பாக ஓபிஎஸ்சிடம் கடிதம் பெற்று சமர்பிப்போம் என்றுஅவரின் வழக்கறிஞர் சார்பாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications