துரைமுருகனை ரஜினி சீண்டியது ஏன்? ரஜினியை உதயநிதி ஆதரித்தது ஏன்? திமுகவுக்குள் புதிய புகைச்சல்
சென்னை: திமுகவிற்குள் மூத்த தலைவர்கள் இருந்து கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடாமல் அப்படியே அமர்ந்துள்ளார்கள் என ரஜினிகாந்த் பேசிய பேச்சு அந்தக் கட்சிக்குள் ஒரு பூகம்பத்தை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த 24 ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய ரஜினி, "எப்போதும் ஸ்கூல் டீச்சருக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சினையே இல்லை. ஈசியாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், இந்தப் பழைய மாணவர்களைச் சமாளிப்பது சாதாரண விசயம் இல்லை. திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர் சாதாரணமானவர்கள் கிடையாது. அசாத்தியமானவர்கள். யாரும் தேர்வில் தோல்வி அடையவில்லை. அனைவரும் அதிக ரேங்க் எடுத்துவிட்டு, இந்த வகுப்பை விட்டுப் போகமாட்டோம் என்று உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் கலைஞர் சமாளித்திருக்கிறார் என்றால், சாதாரண விசயமா அது? துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது ஒரு விசயம் தொடர்பாகக் கருத்துக் கேட்டால், 'அப்படியா? சந்தோஷம்' என்பார். இவர் நன்றாக இருக்கிறது என்கிறாரா? இல்லை நல்லா இல்லை என்கிறாரா? என்று ஒன்றுமே புரியாது. அவர்களை எல்லாம் சமாளித்து வருகின்றார் ஸ்டாலின். Sorry Sir, hands-off to you" என்று பேசி இருந்தார்.
இந்த விழா அரங்கில் ரஜினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்த திமுக இளம் தலைவர்கள் அனைவரும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக அ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இதற்கு அடுத்த நாள் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், "சினிமாவில் தாடி வளர்ந்து போய், பல் விழுந்து போன பிறகு மூத்த நடிகர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருப்பதால், இளம் நடிகர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள். சொல்வது யாருக்கும் ஈசியா" என்று தடாலடியாகப் பதிலடி கொடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு விழாவில் பேசிய உதயநிதி, "பேச்சு போட்டிக்காக அறிவிப்பு வெளியானதும் 17 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக உள்ளனர். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு, அவர்களை அரவணைத்து, வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நேற்று ரஜினிகாந்த் பேசும்போது ஏன் அதிக கைதட்டல் கிடைத்தது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் அதை சொல்லக் கூடாது. அப்படி நான் சொன்னால், மனதில் நானே ஏதோ மறைத்து வைத்துக் கொண்டு சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும்" என்று பேசினார். அப்போது எதிரே அரங்கத்தில் அமர்ந்திருந்த சில மூத்த தலைவர்கள் உதயநிதியைப் பார்த்து குரல் எழுப்பினர். அதற்கு உதயநிதி, 'ஓல்டு இஸ் கோல்டுதான். வழிவிட்டு வழி நடத்த வேண்டும்' என்றுதான் சொன்னேன் என்றார்.
ரஜினிகாந்த் என்ன சொல்ல வந்தார் என்றால், ஸ்டாலினின் ஆளுமையைப் பற்றிப் பாராட்டவே அந்தக் கதையை அவர் சொன்னார். அதாவது கலைஞர் மறைந்த பிறகும் கட்சியைக் கட்டுக் கோப்பாக ஸ்டாலின் மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டு நடத்தி வருகிறார். ஆகவே அவருக்கு எனது hands-off என்றார். அதாவது மு.கருணாநிதி தலைவராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் பயணித்த மூத்த தலைவர்கள், அன்றைக்கு இளைஞராக இருந்த ஸ்டாலினைப் பார்த்தவர்கள் இன்று அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு கட்சியைவிட்டு விலகாமல் உள்ளனர் என்று பொருளில் ரஜினி கூறினார்.
அதைப் புரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், 'இந்த விழாவில் ரஜினியின் பேச்சு மிக வெளிப்படையாக இருந்தது. அதை நான் புரிந்து கொண்டேன். அவர் எனக்கு ஒருவயது மூத்தவர். அவரது அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன்' என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், இந்தப் பேச்சு உதயநிதியை மனதில் வைத்துத்தான் அவர் சொன்னார் என்று உடன்பிறப்புகள் சிலர் முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரைமுருகன் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக தகவல்கள் கசிந்தனர். கூடவே துரைமுருகன் சமுகத்தைச் சேர்ந்த ராமதாஸ், திமுகவில் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவருக்குத் துணை முதல்வர் வழங்கப்பட வேண்டும் என இலைமறை கனியாகப் பேசினார்.
இதை வைத்துத்தான் ரஜினி பேசி இருக்கிறார் என இளைஞரணிக்குள் ஒரு விவாதம் நடந்து வருகிறது. மற்றொரு புறம் சீனியர்கள் சிலர் ஸ்டாலினின் பேச்சால் மனம் கசந்து போய் உள்ளதாகச் சொல்கிறார்கள். ரஜினி பேச்சை ஆமோதிப்பதைப் போன்று ஸ்டாலின், 'நான் உஷாராக இருப்பேன். ஏமாந்துவிடமாட்டேன்' என்று சொன்னது நியாயமா? என்றும் சிலர் ஆதங்கத்தைக் கொட்டி வருவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது. குறிப்பாக துரைமுருகன் தரப்பு அப்செட்டில் உள்ளதாகச் சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் விவாதமாக இருந்ததற்கான பரிசா இது என துரைமுருகன் தன் சக நிர்வாகிகளிடம் நிகழ்ச்சி முடிந்த இரவு முதலே மனம் உடைந்து பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications