அட்டாக்கை கைவிட்ட ஸ்டாலின்? “இப்படி பார்த்ததே இல்லையே..” மோடியுடன் கூடுதல் நெருக்கம்.. பின்னணி என்ன?
சென்னை : முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்து, மிகுந்த மகிழ்ச்சியோடு திரும்பியிருக்கிறார். அதற்குக் காரணம், தமிழகர் முதல்வர் காட்டிய எப்போதுமில்லாத இணக்கம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த மே மாதம் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை அட்டாக் செய்யும் வகையில் பேசியிருந்தார். இது பாஜக தலைவர்கள் மத்தியிலும் புகைச்சலை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த முறை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்ததோடு, பிரதமரோடு நெருக்கமாக சிரித்துப் பேசி, விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்துள்ளது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்துள்ளது.

ஸ்டாலின் - மோடி நெருக்கம்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பத்தை பிரதமரிடம் வழங்கினார் ஸ்டாலின். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் மேடையில் மகிழ்ச்சியாக உரையாடினர். மேடையில் இருவரும் சிரித்தபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இடையிடையே ஸ்டாலினின் தோளைத் தட்டிச் சிரித்தார் பிரதமர் மோடி. எப்போதும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் இந்த முறை அதிக நெருக்கம் காட்டினார்.

கடந்த முறை வந்தபோது
கடந்த மே மாத இறுதியில், இதே நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக அட்டாக் செய்தார். ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைப் பட்டியலை வாசித்தார். மாநில சுயாட்சி பற்றி மோடிக்கு வகுப்பெடுத்தார். இதையடுத்து, பிரதமருக்கு திமுக அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை என பாஜகவினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.

வெகு இணக்கமாக
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் இணக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்துகொண்டாது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து உடல்நலம் விசாரித்தார் என்றும், கொரோனா தொற்றால் பிரதமரை நேரில் சென்று அழைக்க முடியாமல் போய் விட்டது என்றும், எனது நிலைமையை புரிந்துகொண்டு நிச்சயம் வருகிறேன் என பிரதமர் மோடி பெருந்தன்மையோடு உறுதி அளித்தார் என்றும் பிரதமர் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சியாகப் பேசினார்.

புகழ்ந்த ஸ்டாலின்
இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விலும் இருவரும் நெருக்கம் காட்டினர். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் கையால் மாணவர்கள் பட்டம் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று மோடியை புகழ்ந்து பேசினார். ஸ்டாலினின் பேச்சை பிரதமர் மோடி வரவேற்கும் விதமாகப் புன்னகையுடனே காணப்பட்டார்.

நினைவுப் பரிசு
பிரதமர் மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் தனது சென்னை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தனர். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நினைவாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காய்களுடன் கூடிய சதுரங்கப் பலகையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

விமான நிலையத்திற்கே சென்று
விமான நிலையத்திற்கே சென்று வழியனுப்பி வைத்ததோடு, அங்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த திடீர் பரிசால், பிரதமர் மோடி மட்டுமல்லாது, அங்கிருந்த பாஜகவினர் பலரும் ஆச்சர்யப்பட்டனர். கடந்த முறை கடுமை காட்டிய ஸ்டாலின் இந்த முறை வெகு இணக்கமாக நடந்து கொண்டது பிரதமர் மோடியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் இந்த சென்னை பயணம் மறக்க முடியாததாக மோடிக்கு அமைந்து விட்டது என்கிறார்கள்.

கூடுதல் நெருக்கம்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் கூடுதல் நெருக்கம், அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதைத் தவிர்த்து வந்த பிரதமர் மோடி, இன்று சில நிமிடங்கள் மட்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்தார். அதேநேரம் ஸ்டாலினுடன் காட்டிய நெருக்கம் மற்றும் ஸ்டாலின் மோடியைப் புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.

காரணம் என்ன?
எனினும், செஸ் ஒலிம்பியாட் விழாவில் 186 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றதால், பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ விமர்சித்துப் பேசுவது முறையாகாது என்பதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் மேடை நாகரீகத்தைக் கடைபிடித்து, மத்திய அரசை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கூட ஸ்டாலின், பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ விமர்சித்துப் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று கூட பேசவில்லையே
கடந்த சில மாதங்களாக ஆளுநர், திமுக அமைச்சர்கள் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களில் மோதல் போக்குகள் நிலவி வந்த நிலையில், இன்றைய நிகழ்வில் அதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு, இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் கையால் மாணவர்கள் பட்டம் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று மோடியை வானளாவப் புகழ்ந்தார்.

நெகிழ்ச்சிக்கு காரணம் என்ன?
இதுதொடர்பாக திமுகவினர் சொல்வது என்னவென்றால், முதல்வரின் இந்த இணக்கத்திற்கும் 'கூட்டணி அச்சார' கணக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் பிரதமர் மோடி நலம் விசாரித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்துவிட்டார். தான் நேரில் சென்று அழைக்காத போதும், வருவதாக உறுதியளித்தார். அதன் காரணமாகவே, அவர் மனம் நோகும்படி இந்த முறை நடந்து கொள்ளவில்லை, இதில் வேறு எந்த அரசியலும் இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications