ஆ இரவாகிவிட்டதே! நேரம் செல்ல செல்ல.. அப்படியே அசராமல் அமர்ந்திருந்த ஸ்டாலின்! சட்டசபையில் என்னாச்சு?
சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் விவாதம் இரவு வரை நீண்டது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட அமர்வில் தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான துறை ரீதியான விவாதங்கள் நடந்து வருகின்றன.
தினமும் ஒரு துறை என்று அமைச்சர்கள் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டசபையில் இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
இதில் அமைச்சர் சேகர் பாபு துறை ரீதியான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதோடு பல திட்டங்களை பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் நேற்று கிறிஸ்துவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியாவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஜாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு ஒரு பக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதி திராவிடர்கள் எஸ்டி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) சான்றிதழ் அளிக்கப்படும்.
இதனால் இவர்களுக்கு எஸ்டி ரீதியாக கிடைக்கும் இடஒதுக்கீடு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்து உள்ளார்.

என்ன பேசினார் ?
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க வேண்டும்.
வரலாற்று ரீதியாகவே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியாக இருக்கும். அதன் மூலமாக அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
சமூகரீதியாக தரப்பட்ட உரிமைகளை தர மறுப்பது சரியல்ல. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம், என்று குறிப்பிட்டார்.
விவாதம்: நேற்று இந்த தீர்மானம் மீதான தீவிர விவாதம் அவையில் நடைபெற்றது. இந்த சட்டத்தை பாஜக அவையில் கடுமையாக எதிர்த்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை கடுமையாக எதிர்த்து அவையில் பேசினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

சட்டசபை : இந்த விவாதம் எல்லாம் முடிந்து அதன்பின்தான் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் பிற்பகலில்தான் தொடங்கியது.
அதன்பின் மாலை நேர இடைவேளைக்கு பின் மீண்டும் மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதனால் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் விவாதம் இரவு வரை நீண்டது. கேள்வி நேரம் விடாமல் நடத்தப்பட்டது. அதேபோல் எல்லாவிதமான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் விடாமல் அனுமதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நிறைய உறுப்பினர்கள் நேற்று அவையில் பேசினார்கள்.
இதனால் சட்டசபை நீண்ட நேரம் நடைபெற்றது. இரவு 9 மணி தாண்டியும் கூட சட்டசபை நடைபெற்றது. இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அசராமல் அமர்ந்து இருந்து எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications