மெஜாரிட்டி இன்றி முதல்வரான 2 பாஜக தலைகள்! ஆனால் விஜய்க்கு மட்டும் ஆளுநர் மறுப்பது ஏன்? பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தனி மெஜாரிட்டி இல்லை. தனி மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் முதல்வராக பதவியேற்க முடியும் என்பதை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக கூறிவிட்டார். ஆனால் நம் அண்டை மாநிலங்களை சேர்ந்த 2 பாஜக தலைவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே முதல்வராகி உள்ளனர். மெஜாரிட்டி இல்லாமல் இருந்தாலும் கூட பாஜக தலைவர்கள் என்பதாலே இருவருக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அது எப்படி நடந்தது? பாஜக தலைவர்கள் பெரும்பான்மை இன்றி பதவியேற்ற பிறகு அடுத்த சில நாட்களில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்கள் தவெகவிற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அனுமதி கோரினார். ஆனால் அவர் அனுமதி வழங்கவில்லை.

தவெகவின் 108, காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 பேர் மட்டுமே உள்ளதால் விஜய்யை முதல்வராக்க ஆளுநர் தயங்குகிறார். அதோடு மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று விஜய்யை அழைத்து இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக கூறிவிட்டார்.
இந்நிலையில் தான் பெரும்பான்மை இல்லாவிட்டால் முதல்வரான பிறகு சட்டசபையை கூட்டி தான் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிடம் மெஜாரிட்டி காட்ட வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்று காங்கிரஸ், விசிக உள்பட பல கட்சிகள் தவெகவின் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேவேளையில் விஜய்யின் தவெகவோ திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
கர்நாடகா - மகாராஷ்டிரா சம்பவங்கள்
இந்நிலையில் தான் மெஜாரிட்டி இன்றி கர்நாடகா, மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முதல்வரானதும், அதன்பிறகு நடந்த அரசியல் குழப்பங்களும் தான் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்யை முதல்வராக்கும் முடிவை எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு முதல்வராகலாம் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கர்நாடகா, மகாராஷ்டிராவில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் என்ன நடந்தது?
கர்நாடகாவில் கடந்த 2018 மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு பாஜக, காங்கிரஸ், குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 113 எம்எல்ஏக்கள் வேண்டும். மே மாதம் 15 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 37 தொகுதிகளில் வென்றது. மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் கூட தனிப்பெரும் கட்சி என்பதால் எப்படியாவது பிற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று விடலாம் என்று பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.
எடியூரப்பா ராஜினாமா
மே 17 ம் தேதி முதல்வரான எடியூரப்பா, மே 23ம் தேதி வரை அந்த பதவியில் நீடித்தார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயன்றார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட்டது. பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக தோல்வியை ஒப்புக்கொண்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிததனர். முதல்வராக ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி பொறுப்பேற்றார். ஓராண்டு முதல்வராக இருந்த நிலையில் காங்கிரஸின் 13 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்களும், ஒரு சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ஆகியோர் கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குமாரசாமி பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் குழப்பத்துக்கு காரணமாக அமைந்தது.
மகாராஷ்டிரா சம்பவம்
அதேபோல் கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அங்கு மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மெஜாரிட்டிக்கு 145 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவிலலை.
பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் பாஜக கூட்டணியில் களமிறங்கிய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (இப்போது கட்சி பிளவுப்பட்டுள்ளது) 64 தொகுதிகளில் வென்றது. இதனால் இந்த கூட்டணிக்கு மொத்தம் 169 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதனால் கூட்டணி ஆட்சிக்கு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரே முதல் முறையாக முதல்வர் பதவியை கேட்டார். இரண்டரை ஆண்டுகள் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றார். ஆனால் பாஜக வழங்கவில்லை.
3 நாளில் முதல்வர் பதவி ராஜினாமா
இதையடுத்து சிவசேனா எப்படியும் தங்களுக்கு ஆதரவு வழங்கும் என்று நினைத்து தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவசரஅவசரமாக முதல்வராக பதவியேற்றார். அவர் 2019 நவம்பர் 23ம் தேதி முதல்வரானார். அவருடன் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அஜித்பவார் (சமீபத்தில் விமான விபத்தில் பலியானார்) துணை முதல்வரானார்.
3 நாட்கள் மட்டுமே இவர்கள் முதல்வராக இருந்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபை கூடியது. அந்த சமயத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
கவிழ்ந்த கூட்டணி ஆட்சி
பிறகு சிவசேனாவின் 63 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 44 எம்எல்ஏக்கள் சேர்ந்துஆட்சியை பிடித்தனர். உத்தவ் தாக்கரே முதல்வரானார். இரண்டரை ஆண்டு காலம் அவர் முதல்வரான பிறகு ஏக்நாத் ஷிண்டே சிவசனோவை உடைத்தார். தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். இதையடுத்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவில் முதல்வரானார்.
ஆளுநர் தயக்கத்தின் பின்னணி
இருப்பினும் கூட மேற்கூறிய கர்நாடகா, மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்காமலே எடியூரப்பா மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முதல்வரானார்கள். அதன்பிறகு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த 2 சம்பவங்களிலும் அவர்கள் தனிப்பெரும் கட்சி என்பதை சொல்லி தான் ஆட்சியமைக்க உரிமை கோரினர். கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கவில்லை.
ஆனால் விஜய்யோ, தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சியமைக்க கூறாமல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளார். அதோடு தனது கூட்டணிக்கு மொத்தம் 112 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவர் மீதமுள்ள 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கேட்கிறார். ஒருவேளை விஜய்யும் தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி இருந்தால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தெரிவித்து இருக்கலாம். இதுதான் தற்போது விஜய் விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் குற்றச்சாட்டு
இதனால் தான் தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு விஜய் முதல்வராக வேண்டும் என்பதில் ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகர் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அந்த மாநிலங்களில் முதல்வராக பதவியேற்று ராஜினாமா செய்த பிறகு அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தன. இதனால் தான் தற்போது இத்தகைய குழப்பங்கள் தமிழகத்தில் நடக்க வேண்டாம் என்று ஆளுநர் நினைக்கலாம்.
இதற்கிடையே தான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த 2 மாநிலங்களிலும் பாஜக தலைவர்கள் என்பதாலே பெரும்பான்மை நிரூபிக்காமல் முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ள ஆளுநர்கள் அனுமதித்ததாகவும், ஆனால் விஜய் பாஜகவுக்கு எதிரானவர் என்பதால் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தககது.
ஏனென்றால் தனிப்பெரும் கட்சி என்பதால் விஜய்யை முதலில் முதல்வராக்கலாம். அதன்பிறகு சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வைக்கலாம். பெரும்பான்மை நிரூபித்தால் அவர் முதல்வர் பதவியில் தொடர்வார். இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய போகிறார். இதில் என்ன இருக்கிறது? என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருவதோடு, விஜய் பாஜகவுக்கு எதிரானவர் என்பதால் ஆளுநர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்றும் அவர்கள் கவலையை பகிர்ந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் விஜய் முதல்வர் ஆவாரா? இல்லையா? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதற்கான விடையை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.















Click it and Unblock the Notifications